கவுண்டவுன் “ஸ்டார்ட்”! அடுத்த 3 மணி நேரம்.. மழையில் நனையபோகும் 12 மாவட்டங்கள்.. உங்க ஊரு இருக்கா?
சென்னை: வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருக்கும் நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. நாளை முதல் அடுத்த 28 ஆம் தேதி வரை கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ள நிலையில் தற்போது அடுத்த 3 மணி நேரம் மழை பெய்யும் மாவட்டங்களின் பெயர்கள் வெளியிடப்பட்டு உள்ளன.
இன்று மதியம் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது, "தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (24-12-2022) காலை 08:30 மணி அளவில் நாகப்பட்டினத்திலிருந்து சுமார் 470 கிலோமீட்டர் கிழக்கே நிலை கொண்டுள்ளது.
இது மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து 25ஆம் தேதி காலையில் இலங்கை கடற்கரை அருகில் நிலவக் கூடும். அதன் பிறகு மேலும் மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து 26ஆம் தேதி காலையில் இலங்கை வழியாக குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

மழைக்கு வாய்ப்பு
இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

டெல்டா, தென் மாவட்டங்கள்
26 ஆம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், தேனி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 27 மற்றும் 28 ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை நிலவரம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்." என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அடுத்த 3 மணி நேரம்
இந்த நிலையில் இன்று மாலை 6:40 மணியளவில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், "அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்." என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications