தமிழ்நாட்டின் கனவு நிறைவேறுது.. சென்னை-கன்னியாகுமரி வழித்தடத்தில் 12 ரூட்.. அடுத்த வருடமே சூப்பர்
சென்னை: சென்னை- கன்னியாகுமரி தொழில் வழித்தடம் அமைக்கும் திட்டத்தில் மேம்படுத்தப்பட்டு வரும் 12 சாலைகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அடுத்த ஆண்டு கொண்டு வரப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாட்டின் 16 மாநில நெடுஞ்சாலைகள் திட்டம் முழுமையாக நிறைவேறும் போது எல்லா மாநில சாலைகளுமே அற்புதமாக மாறிவிடும்.
இந்தியாவின் கிழக்கு கடற்கரை பொருளாதார வழித்தடத்தில் 'சாகர்மாலா' என்ற திட்டத்தை மத்திய தொழில் துறையின் தொழில் கொள்கை மேம்பாட்டுப் பிரிவு செயல்படுத்தி வருகிறது. இந்த கிழக்குக் கடற்கரை பொருளாதார வழித்தடத்திட்டத்தின், ஒரு பகுதியாக தமிழகத்தில் சென்னை- கன்னியாகுமரி தொழில் வழித்தடம் இருக்கிறது. போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதுடன், தொழில் வளர்ச்சியை எளிதாக்குவதற்காக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

சென்னை கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்டமானது பொருளாதார தொழிற்துறை வளர்ச்சிகளுக்காக, மாநில, மத்திய நிதியுதவி மற்றும் இதர வெளிநிதி ஆதாரத்துடன் பல்வேறு வகையான சாலை உட்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. கிழக்குக் கடற்கரை வழித்தடம் தமிழகம் மற்றும் நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கான மத்திய அரசின் தொழில் கொள்கை மற்றும் வளர்ச்சித் துறையால் அறிவிக்கப்பட்ட ஐந்து தொழில் தடங்களில் ஒன்றாகும்.
மத்திய அரசு கிழக்குக் கடற்கரை பொருளாதாரதட திட்டத்தினை, ஆசிய வளர்ச்சி வங்கியின் கடனுதவியுடன் செயல்படுத்தி வருகிறது. சென்னை கன்னியாகுமரி தொழில்தட திட்டம், ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் ரூ.6448.24 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. . இத்திட்டத்தின் கீழ் 16 மாநில நெடுஞ்சாலைகள் சுமார் 589 கிமீ நீளச் சாலைகளில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சாலைகள் கட்ட இரண்டு ஆண்டு காலம் எடுத்துக் கொள்ளப்படும். அதன்பின்னர் 7 ஆண்டுகள் பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது. இந்த சாலைப்பணிகள் ஒப்பந்ததார்கள் மூலம் நிலம் எடுப்பு பணிகள் முடிந்து நடந்து வருகிறது.
இந்த திட்டத்தால் செய்யூர்- வந்தவாசி-சேத்துப்பட்டு- போளூர் சாலை மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலையுடனான இணைப்பு சாலை, காஞ்சிபுரம்-அரக்கோணம்-திருத்தணி சாலை, செங்கல்பட்டு -காஞ்சிபுரம் சாலை மற்றும் மிலிட்டரி சாலை,
திருச்செந்தூர்-பாளையங்கோட்டை சாலை, மயிலாடுதுறை- திருவாரூர் சாலை , கும்பகோணம் மன்னார்குடி சாலை, தஞ்சாவூர் மன்னார்குடி சாலை உள்பட 16 மாநில நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்படுகின்றன.
தமிழகத்தில் உள்ள 13 கடலோர மாவட்டங்கள் மற்றும் 10 உள்மாவட்டங்கள் உள்பட 23 மாவட்டங்கள் பயனடைய உள்ளன. இந்த மாவட்டங்களில் உள்ள மாநில நெடுஞ்சாலைகள் தரம் உயர்த்தப்படுகிறது. இதன்படி, மேலூர்- திருப்பத்தூர், தஞ்சாவூர்- மன்னார்குடி ஆகிய 5 மாநில சாலைகள் மேம்படுத்தும் பணி நிறைவு செய்யப்பட்டிருக்கிறது. காஞ்சிபுரம்- அரக்கோணம், செங்கல்பட்டு- காஞ்சிபுரம் ஆகிய 12 சாலை மேம்படுத்தும் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்திருக்கிறது.
அடுத்த ஆண்டு (2025) மே அல்லது ஜூன் மாதம் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இந்த சாலைகள் கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தத் திட்டத்தால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அமைந்துள்ள துறைமுகங்கள் சர்வதேச விமான நிலையங்கள், தூத்துக்குடி உள்நாட்டு விமான நிலையம் ஆகியவை இணைக்கப்பட உள்ளது.
இதன் மூலம் தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதுடன் வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும் என்றும், மத்திய அரசின் 'சாகர்மாலா' திட்டத்திற்கு இவை உத்வேகம் அளிக்கும் என்று தமிழக அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications