கோடை வெயிலுக்கு குளுகுளுன்னு பயணிக்கலாம்.. சென்னை - நெல்லை சிறப்பு ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்
சென்னை: சென்னை - நெல்லை இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் கூடுதலாக ஏசி பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்த பலரும் சென்னையில் வசித்து வருகிறார்கள். பணி நிமித்தமாகவும் கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் என பல்வேறு காரணங்களுக்காக சென்னையில் வசித்து வரும் தென் மாவட்ட மக்கள் விடுமுறை நாட்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

இதனால், சென்னையில் இருந்து நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் எப்போதும் பயணிகள் கூட்டம் அலைமோதும். அதுவும் விடுமுறை தினங்களில் நெல்லை, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்களில் டிக்கெட் கிடைப்பதற்குள் பயணிகளுக்கு போதும் போதும் என்று ஆகிவிடும். அந்த அளவுக்கு பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
தெற்கு ரயில்வே: பொதுப்பெட்டிகளில் கால் வைக்க முடியாத அளவுக்கு பயணிகள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும். தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், பயணிகள் நலன் கருதி சென்னை எழும்பூர் - நெல்லை இடையே, சிறப்பு வாராந்திர ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்தது.
சிறப்பு ரயில்: அதன்படி திருநெல்வேலியில் இருந்து வாரந்தோறும் வியாழக்கிழமை மாலை 6.45 மணிக்கு திருநெல்வேலி - சென்னை எழும்பூர் வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண்: 06070) புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடைய உள்ளது. இந்த திருநெல்வேலி - சென்னை எழும்பூர் வாராந்திர சிறப்பு ரயில் ஏப்ரல் 11, 18, 25, மே 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் இயங்க உள்ளது.
கூடுதலாக 2 ஏசி பெட்டிகள்: மறுமார்க்கமாக சென்னை எழும்பூரில் இருந்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு சென்னை எழும்பூர் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் (06069) புறப்பட்டு மறுநாள் காலை 7.10 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும். இந்த ரயில் வரும் 12, 19, 26, 3, 10, 17, 24 மற்றும் 31 ஆகிய தேதிகளில் மட்டும் இயங்க உள்ளது.
கோடை விடுமுறைக்கு சொந்த ஊருக்கு செல்ல வசதியாக இருக்கும் என்று பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் கோடை வெயிலை கருத்தில் கொண்டு இந்த ரயிலில் கூடுதலாக இரண்டு ஏசி பெட்டிகள் இணைக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில், கூறப்பட்டிருப்பதாவது:-
மே 23 முதல்: "சென்னை எழும்பூர் - நெல்லை வாராந்திர சிறப்பு ரயிலில் மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகள் 2 கூடுதலாக இணைக்கப்படும். வரும் மே 23 ஆம் தேதி முதல் இது அமலுக்கு வரும். சிறப்பு ரயிலில் இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டி 1; மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகள்; 6, ஏசி (three tier) எகனாமி கோச்கள் -2, படுக்கை வசதி கொண்ட ஸ்லீப்பர் கோச்கள் 6, பொதுப்பெட்டிகள் 4, 1 லக்கேஜ் கம் பிரேக் வேன், 1 இரண்டாம் வகுப்பு (divyangjan friendly) பெட்டிகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications