சொந்த ஊர் செல்ல முடியாமல் தமிழகத்தில் 2 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் தவிப்பு
சென்னை: சொந்த ஊர் செல்ல முடியாமல் தமிழகத்தில் 2 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் தவித்து வருகிறார்கள்.
ஜார்க்கண்ட், பீகார் உள்பட பல்வேறு வெளிமாநிலங்களைச் சேர்ந்த ஏராளமானோர் தொழில் நிமித்தமாக தமிழகம், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் தங்கி வேலை பார்த்து வந்தனர்.
அவர்கள் பணியாற்றி வந்த ஹோட்டல்கள், கட்டடத் தொழில், மால்கள், தியேட்டர்கள், துணி தொழிற்சாலைகள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளதால் இவர்கள் வேலையின்றி அவதிப்பட்டு வருகிறார்கள்.
போக்குவரத்து முடக்கம்
இந்த நிலையில் போக்குவரத்து முடக்கப்பட்டதால் சொந்த ஊர் திரும்புவும் முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ள அவர்கள் ஆங்காங்கே முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் வடமாநில தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு சிறப்பு ரயில் மூலம் அனுப்பி வைக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆந்திரா
இதையடுத்து தெலுங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு இவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டனர். ஆனால் தமிழகத்தில் அது போன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து நேற்று பல்லாவரம், கிண்டி, வேளச்சேரி, முகப்பேர் ஆகிய பகுதிகளில் வடமாநில தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.
கூடுதல் கட்டணம்
இந்த நிலையில் சமூக விலகல் கேள்விக்குறியானதால் அவர்களுடன் போலீஸார் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த நிலையில் தமிழகத்தில் 2 லட்சம் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். முகாம்களிலும் எந்த வசதிகளும் இல்லை என்று கூறப்படுகிறது. சிறப்பு ரயில் 2ஆவது வகுப்பில் செல்ல தூங்கும் வசதியுடன் கூடுதலாக 50 ரூ கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
Recommended Video
சிறப்பு ரயில்கள்
உணவுக்கே வழியில்லாத நிலையில் கூடுதலாக கட்டணம் கொடுப்பது என்பது கேள்விக்குறியாகியுள்ளது. நேற்றைய போராட்டத்திற்கு பின்னர் அவர்கள் ஊர்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து ரயில்வே துறையிடம் கேட்டபோது மாநில அரசு கோரினால் மட்டுமே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவித்தனர்.