"அந்த நாள்".. ஜெ. போட்ட உத்தரவு.. சரசரவென வந்த சைலேந்திர பாபு.. திகைத்து நின்ற திமுக.. என்ன நடந்தது?
சென்னை: தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்டு இருக்கும் சைலேந்திர பாபு ஐபிஎஸ் திமுக கட்சியின் "குட் புக்கில்" வந்ததே ஒரு சுவாரசியமான கதைதான். 2001-2006 காலகட்டத்தில் நடந்த சம்பவம் ஒன்றுதான் திமுக தலைவர்களின் கவனத்தை இவர் பக்கம் திருப்பியது.
Recommended Video
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு ஐபிஎஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு டிஜிபியாக கடந்த 2019-ம் வருடம் ஜூன் மாதம் ஜே.கே திரிபாதி நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் இவரின் பதவிக்காலம் வரும் ஜூன் 30ம் தேதியோடு முடிவடைகிறது.
இந்த நிலையில் புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசு பல்வேறு துறைகளில் சிறப்பான ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை நியமித்துக் கொண்டு இருக்கும் நிலையில், சைலேந்திர பாபுவின் நியமனம் வரவேற்பை பெற்றுள்ளது.

சென்னை
தமிழ்நாடு ரயில்வே போலீசின் டிஜிபியாக இருந்தவருக்கு தற்போது மொத்த தமிழ்நாடு போலீசின் "ஹெட்" ஆகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ரயில்வே டிஜிபியாக குற்றங்களை குறைத்தது, ரயில் பயணத்தில் பாதுகாப்பை அதிகரித்தார். கோவை ஆணையராக இருந்த போது இரட்டை குழந்தைகள் கடத்தல் மற்றும் கொலை வழக்கில் துணிச்சலாக என்கவுண்டர் செய்து கடத்தல் வழக்கில் ஸ்டிரிக்ட் காட்டியது சைலேந்திர பாபுதான்.

கவனம்
இந்த என்கவுண்டர்தான் அதன்பின் தமிழ்நாடு முழுக்க கடத்தல் கும்பல்கள் இடையே கிலியை ஏற்படுத்தி இருந்தது. சென்னையில் கடலோர காவல்துறை உயர் அதிகாரியாக கடலோர பகுதிகளில் நடக்கும் குற்றங்களை குறைத்து, மீனவர்களுடன் இணைந்து பாதுகாப்பு பணிகளை செய்து வந்தார். போலீஸ்காரர்கள் சிலர் மீனவர்களை குற்றவாளிகள் என்ற கண்ணோட்டத்தோடு பார்க்கும் போது அதே மீனவர்களை வைத்து கடலோர ரோந்து பணிக்கான கேட் கீப்பர்ஸ் என்று குழுவை உருவாக்கி தினசரி ரோந்து பணிகளை காவலர்களுடன் இணைந்து மேற்கொள்ள வைத்தார்.

மீனவர்கள்
மக்களுடனும், அதிகாரிகளுடனும் நெருக்கமாக இருக்கும் சைலேந்திரபாபு ஐபிஎஸ்ஸுக்கு மக்களிடையே நல்ல பெயர் இருந்தாலும், இவர் திமுகவின் குட் புக்கிற்கு வந்தது 2005-2006 காலகட்டத்தில்தான். ஜெயலலிதா முதல்வராக இருந்த 2001-2006 காலகட்டத்தில் திமுகவினரிடம் போலீசார் மிகவும் கண்டிப்பாக இருந்தனர். திமுகவின் உட்சபட்ச தலைகள் தொடங்கி அடிமட்ட தொண்டர்கள் வரை யார் வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற நிலைதான் இருந்தது.

என்ன நடந்தது
சில போலீஸ் அதிகாரிகள் திமுகவினரை பார்த்தாலே ஸ்டிரிக்ட் காட்டும் காலம் அது. 2005 இறுதியில் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் திமுக - அதிமுக இடையே சட்டசபையில் கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அவைக்குள் கோஷம் எழுப்பிவிட்டு திமுகவினர் மொத்தமாக வெளிநடப்பு செய்து, அப்படியே காமராஜர் சாலையில் பேரணி செய்தனர். அதிமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையிலேயே பேரணி மேற்கொண்டனர்.

சட்டசபை
முக்கியமாக ஜெயலலிதா சட்டசபையில் இருந்து வெளியே வரும் நேரம் பார்த்து திமுகவினர் சாலை மறியலில் குதித்தனர். திமுகவினரை அடிக்கடி போலீஸ் கைது செய்த காலம் அது. அப்போது சென்னையின் இணை ஆணையராக இருந்தவர் சைலேந்திர பாபு, ஜெயலலிதாவின் கான்வாய் பாதுகாப்பு பொறுப்பையும் கவனித்து வந்தார். சாலையில் இருக்கும் திமுகவினரை உடனடியாக அப்புறப்படுத்தும்படி சைலேந்திரபாபுவிற்கு கட்டளை பறந்தது.

கட்டளை
"என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், கான்வாய் வரும் போது ஒருவரும் சாலையில் இருக்க கூடாது என்று சைலேந்திர பாபுவிற்கு கட்டளை பறந்தது. திமுகவின் துரைமுருகன் உள்ளிட்ட பல மூத்த உறுப்பினர்கள் அன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆனால் அன்று சைலேந்திர பாபு லத்தியை கையில் எடுக்காமல் பேச்சுவார்த்தையை கையில் எடுத்தார்.

பேச்சுவார்த்தை
சில மூத்த அதிகாரிகள் 2001-2006 காலகட்டத்தில் திமுகவினரை மோசமாக கையாண்ட போது, சைலேந்திரபாபு அமைதியாக பேச்சுவார்த்தை நடத்தி, எல்லோரையும் செல்லும்படி கூறினார். திமுகவினர் கோபமாக கோஷம் எழுப்பிய போதும் சைலேந்திர பாபு அமைதி இழக்காமல் எல்லோரிடமும் தன்மையாக பேசி அவர்களை கலையும்படி கூறினார். முக்கியமாக திமுகவின் மூத்த உறுப்பினர்களிடம் கனிவாக பேசி, அவர்களை செல்லும்படி கூறினார்.

மாற்றம்
இந்த சம்பவம் திமுகவினர் மத்தியில் சைலேந்திர பாபுவிற்கு நற்பெயரை கொடுத்தது. எல்லா கட்சிகளையும் சமமாக மதிக்கிறார், அதிகாரத்தை கையில் எடுக்கவில்லை, மற்றவர்களை போல இல்லை என்பதால் அப்போதே முன்னாள் முதல்வர் கருணாநிதியின் குட் புக்கில் இவர் சேர்க்கப்பட்டார். விளைவு 2006ல் ஆட்சிக்கு வந்ததும் கோவை ஆணையராக சைலேந்திர பாபு நியமிக்கப்பட்டார்.

தமிழ் மாநாடு
செம்மொழி மாநாட்டை மனதில் வைத்து சைலேந்திர பாபுவிற்கு ஆணையர் பொறுப்பு வழங்கப்பட்டது. பல அதிகாரிகள் இருந்த போது மிக முக்கியமான பொறுப்பை சைலேந்திர பாபுவிற்கு கருணாநிதி கொடுத்தார். மாநாட்டை நடத்தும் மொத்த பொறுப்பையும் கருணாநிதி சைலேந்திர பாபுவிற்கு கொடுத்தார். அப்போது இவரின் பணிகளை கருணாநிதி நேரிலேயே பாராட்டி இருந்தார். தற்போதைய முதல்வர் ஸ்டாலினுக்கும் அப்போதுதான் சைலேந்திர பாபு நெருக்கம் ஆனார்.

நெருக்கம்
2006-2011 ஆட்சிக்காலம் முழுக்க பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்த சைலேந்திர பாபுவிற்கு தற்போது மிக உயரிய டிஜிபி பொறுப்பை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அளித்துள்ளார். அரசியலுக்கு அப்பாற்பட்டு மிக நேர்மையான அதிகாரி இவர். ஊழல் கறை படியாதவர். சைலேந்திர பாபு, கரண் சின்ஹா, சஞ்சய் அரோரா ஆகியோரின் பெயர்கள் இறுதி செய்யப்பட்ட நிலையில், கடைசியில் சைலேந்திர பாபுவை முதல்வர் ஸ்டாலின் நியமித்துள்ளார்.












Click it and Unblock the Notifications