அன்றே எச்சரித்த தமிழ்நாடு.. இன்று ராஜஸ்தானில் மரண ஓலம்! நீட்டால் 8 மாதத்தில் 22 மாணவர்கள் தற்கொலை
சென்னை: ராஜஸ்தான் மாநிலத்தில் 8 மாதங்களில் ஒரே மாவட்டத்தை சேர்ந்த 22 மாணவர்கள் நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த விவகாரத்தில் தமிழ்நாடு காட்டிய எதிர்ப்பு தற்போது அதிகம் பேசப்பட்டு வருகிறது.
இந்தியாவிலேயே மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை எதிர்த்து வரும் ஒரே மாநிலம் தமிழ்நாடு. அரசு பள்ளி மாணவர்கள், ஏழை, எளிய, கிராமபுற மாணவர்கள் நீட் தேர்வால் கடுமையாக பாதிக்கப்படுவதை சுட்டிக்காட்டி தமிழ்நாடு அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

நீட் தேர்வு வருகையால் மருத்துவராகும் கனவை இழந்த அனிதா முதல் ஜெகதீஸ்வரன் வரை 21 பேர் தமிழ்நாட்டில் தற்கொலை செய்துகொண்டு உள்ளனர். நீட் விலக்கு பெற்றுத் தருவோம் என தமிழ்நாடு அரசு கொடுத்த வாக்குறுதிகளை நம்பி ஏமாந்தே இவ்வளவு பேர் விரக்தியில் தற்கொலை செய்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
நிலைமை இவ்வாறு இருக்க நீட் தேர்வுக்கு எந்த விதமான எதிர்ப்பையும் தெரிவிக்காத ராஜஸ்தானில் கடந்த 8 மாதங்களில் ஒரே மாவட்டத்தில் மட்டும் 22 மாணவர்கள் நீட் தேர்வால் தற்கொலை செய்து இருக்கிறார்கள். ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தில்தான் இந்த துயர சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன.
நுழைவுத் தேர்வு பயிற்சிக்காக ஆண்டுதோறும் 2 லட்சம் மாணவர்கள் கோட்டா மாவட்டத்திற்கு செல்கிறார்கள். அங்கு ஏராளமான நீட் பயிற்சி மையங்கள் அமைந்து இருக்கின்றன. அந்த பயிற்சி மையங்கள் தங்கள் ரிசல்டை அதிகரித்து காட்டுவதற்காக மாணவர்களுக்கு ஓய்வே கொடுக்காமல் துன்புறுத்துவதாக குற்றச்சாட்டு உள்ளது.
இந்த நிலையில்தான் கடந்த ஞாயிறு அன்று 4 மணி நேரத்தில் 2 மாணவர்கள் தற்கொலை செய்து உள்ளார்கள். 2023 ஆம் ஆண்டு ஆரம்பித்து 8 மாதங்கள் கூட முடிவடையாத நிலையில் 22 பேர் கோட்டா மாவட்டத்தில் மட்டும் தற்கொலை செய்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு 15 மாணவர்கள் இதுபோல் உயிரை மாய்த்து உள்ளார்கள்.
ஜவஹர்நகர் பகுதியில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் 17 வயது மாணவன் 6 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார். அதேபோல் 18 வயது மாணவனும் வேறொரு நீட் பயிற்சி மையத்தில் தற்கொலை செய்துள்ளார். நீட் பயிற்சி மையங்களில் தொடர்ந்து கொடுக்கப்படும் அழுத்தம் மற்றும் மாதிரி தேர்வுகளின் காரணமாக ஏற்படும் மன உளைச்சலால் இந்த துயர முடிவை மாணவர்கள் எடுப்பதாக கூறப்படுகிறது.
பயிற்சி மையங்கள் நடத்திய மாதிரி தேர்வுகளில் குறைவான மதிப்பெண்களை எடுத்த காரணத்தாலேயே இவர்கள் தற்கொலை செய்து இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனை அடுத்து கோட்டா மாவட்ட ஆட்சியர் ஓபி பங்கர் நீட் பயிற்சி மையங்கள் அடுத்த 2 மாதங்களுக்கு மாதிரி தேர்வுகளை நடத்தக்கூடாது என உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
மாணவர்களுக்கு தேவையான மனநல ஊக்கத்தை வழங்க வேண்டும் என அவர் அறிவுறுத்தி உள்ளனர். மருத்துவர்களாக இருப்பவர்கள் திறமையானவர்களாக மட்டுமின்றி நல்ல மனநலத்தோடு இருக்க வேண்டும். ஆனால், இதுபோன்ற தேர்வுகள் அவர்களின் குழந்தை மற்றும் பதின்ம பருவத்தை பறித்து மனநல பாதிப்பை ஏற்படுத்துவதையே இந்த தற்கொலைகள் காட்டுகின்றன.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற அழுத்தத்துடன் நுழைவுத் தேர்வு அழுத்தமும் சேர்ந்துகொள்வதால், பல உயிர்களை காக்க மருத்துவர்களாக விரும்பியவர்களே உயிர்களை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இதை அன்றே எச்சரித்தது தமிழ்நாடு. ஆனால், பிற மாநிலங்கள் அதை பொருட்படுத்தவில்லை. இன்று ராஜஸ்தானில் இத்தனை உயிர்களை போயிருக்கிறது.












Click it and Unblock the Notifications