விஜயகாந்த் உள்பட 3 பேர் வீடுகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வாபஸ்! ஏன் என்னாச்சு?
சென்னை: தமிழகத்தில் பிரேமலதா விஜயகாந்த், தமிழிசை சவுந்திரராஜன், செல்வப்பெருந்தகை ஆகிய அரசியல் கட்சித் தலைவர்களின் வீடுகளுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு வழங்கப்பட்ட நிலையில் அவை தற்போது வாபஸ் பெறப்பட்டுவிட்டது.
ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒரு முறையும் அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டோரின் வீடுகளுக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெறும்.

அந்த வகையில் மேற்கொண்ட 3 பேரின் வீடுகளுக்கும் வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டது. மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது அவரது சாலிகிராம் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய 5 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அது போல் பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், தெலுங்கானா ஆளுநராகவும் புதுவை துணை நிலை ஆளுநராகவும் இருந்த போது அவரது சென்னை வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய 5 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அது போல் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவர் அப்போது கேட்டதை அடுத்து அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
இந்த பாதுகாப்பு சுழற்சி முறையில் 24 மணி நேரமும் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இது போல் பாதுகாப்பு கொடுத்தது குறித்து 6 மாதங்களுக்கு ஒரு முறை உயரதிகாரிகள் ஆலோசனை நடத்துவர். அப்போது அந்த 3 அரசியல் கட்சித் தலைவர்களையும் தொடர்பு கொண்டு, தற்போது ஏதேனும் அச்சுறுத்தல் இருக்கிறதா என கேட்டனர்.
அவர்கள் மூவரும் இல்லை என சொன்னதை அடுத்து போலீஸ் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. அதே வேளையில் உளவுத் துறை தகவலின்படியும் அவர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என தெரிந்ததை அடுத்து பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது.












Click it and Unblock the Notifications