பழைய பைக்குகள்.. குறைந்த விலையில்.. வாங்க ரெடியா.. சென்னை காவல்துறை அறிவிப்பு
சென்னை: சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் உரிமை கோரப்படாத 260 இருசக்கர வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கஞ்சா விற்பனை உள்பட குற்றச்செயல்களில் ஈடுபட்டு சிக்கும் இருசக்கர வாகனங்கள், குடிபோதையில் சென்று குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களின் வாகனங்கள் உள்பட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடும் வாகனங்கள் போலீசார் பறிமுதல் செய்கிறார்கள்.

அப்படி பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை போலீசார் அவ்வப்போது ஏலம் விடுவார்கள். அப்படி ஏலம் விடப்படும் வாகனங்கள் குறித்து தான் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,"சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உரிமை கோரப்படாத மற்றும் கைவிடப்பட்ட 260 இருசக்கர வாகனங்கள், சென்னை, புதுப்பேட்டை, சென்னை பெருநகர காவல் ஆயுதப்படை மைதானத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவ்வாகனங்கள் 28.06.2023 அன்று காலை 10.00 மணியளவில் பகிரங்க ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.
பகிரங்க ஏலத்திற்கான முன்பதிவு 14.06.2023 மற்றும் 15.06.2023 ஆகிய நாட்களில் காலை 10 மணி முதல் 14 மணி வரை சென்னை, புதுப்பேட்டை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது. அடையாள அட்டை மற்றும் GST பதிவெண் சான்றுடன் வரும் ஏலதாரர்கள் மட்டுமே முன்பதிவு கட்டணம் செலுத்த அனுமதிக்கப்படுவர்.
28.06.2023 அன்று காலை 10.00 மணியளவில் முன்பணம் செலுத்தி பதிவு செய்த ஏலதாரர்கள் மற்றும் ஏலக்குழுவினர் முன்னிலையில் பகிரங்க ஏலம் நடைபெறும். ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட வாகனங்களுக்கான ஏலத் தொகை மற்றும் GST தொகையினை மறுநாள் முழுவதுமாக செலுத்த வேண்டும்." இவ்வாறு சென்னை காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை பிடிக்கவும், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவதை தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னை காவல்துறை வாகன இடைமறிப்பு அமைப்புடன் இரண்டு ரோந்து வாகனங்களை அண்மையில் சேர்த்துள்ளது.
அதில் 360-டிகிரி ANPR (தானியங்கி எண் தகடு அங்கீகாரம்) கேமரா பொருத்தப்பட்டது மற்றும் பிற போக்குவரத்து விதிமீறல்களைப் பிடிக்க 2D ரேடார் அமைப்புடன் இயக்கப்படுகிறது. இதில் இருக்கும் இன்டர்செப்டர், தலைக்கவசம் அணியாமல் சவாரி செய்வது, டிரிபிள் ரைடிங், வாகனம் ஓட்டும் போது செல்போன்களைப் பயன்படுத்துதல் மற்றும் அதிக வேகம் போன்ற பிற போக்குவரத்து விதிமீறல்களை கண்டுபிடித்து அபராதம் விதிக்கும்.












Click it and Unblock the Notifications