மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஓபிசிக்கு 27% இடஒதுக்கீடு வழங்க தயார்: மத்திய அரசு
சென்னை: மருத்துவ மாணவர் படிப்புக்கான சேர்க்கையில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (ஓபிசி) 27% இடஒதுக்கீடு வழங்க தயார் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய கல்வி நிறுவனங்களில் மருத்துவப் படிப்புகளில் ஓ.பி.சி. பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு கோரி திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இவ்வழக்கில் இடஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை இல்லை என்கிற கருத்தையும் உச்சநீதிமன்றம் கூறியது.
அத்துடன் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடுமாறு அரசியல் கட்சிகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்த அறிவுறுத்தலின் பேரில் இந்த கட்சிகள் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடின.
பிரதமர் மோடியை ஆதரிப்பதில் எந்த தயக்கமும் இல்லை... அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஸ்டாலின் திட்டவட்டம்
இவ்வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி பெஞ்ச் விசாரித்தது. இந்த விசாரணையில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருக்கிறது.அதில், மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
ஸ்டாலின் வரவேற்பு
மத்திய அரசின் பிரமாண பத்திரத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக ஸ்டாலின் கூறுகையில், திமுக-வின் சமூகநீதிப் போராட்டத்தில் மேலுமொரு வெற்றியாக மருத்துவ சேர்க்கையில் OBC மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீட்டை அளிக்கத் தயார் என மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது. இது முதல்கட்ட வெற்றி. 69% அடிப்படையில் OBCக்கு 50% Reservation பெற தொடர்ந்து போராடுவோம்! என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.