2- வது நாளில் போராட்டம் தீவிரம்... பல பள்ளிகள் மூடல்... ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சாலை மறியல்
சென்னை: 2 வது நாளாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
பழைய ஓய்வூதிய திட்டம் உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது.
முதல் நாள் போராட்டத்தை விட இரண்டாம் நாளில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தில் 6.5 லட்சம் அரசு ஊழியர்கள், 4.5 லட்சம் ஆசிரியர்கள் உள்ளனர்.

மாணவர்களே பாடம் நடத்தினர்
ஜாக்டோ-ஜியோவின் முதல்நாள் போராட்டத்தில் 7 லட்சம் பேர் பங்கேற்றனர். பள்ளிக் கல்வித்துறையை பொறுத்தவரையில் தொடக்கப்பள்ளிகள் அதிகளவு செயல்படவில்லை. ஆசிரியர்கள் பணிக்கு வராததால் ஒரு சில பள்ளிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். தேர்வு நேரம் என்பதால், சில இடங்களில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் இல்லாததால் மாணவர்களே பாடம் நடத்தினார்கள்.

பணிகள் பாதிப்பு
அரசு ஊழியர்கள் வேலைக்கு செல்லாததால் வருவாய்த்துறை, வணிக வரித்துறை, ஊரக வளர்ச்சி துறை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தாசில்தார், பஞ்சாயத்து யூனியன் அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.

போக்குவரத்து நெரிசல்
சென்னையில் மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பு மறியலில் ஈடுபட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் குவிந்தனர். இதனால், கடுமையான நெரிசல் ஏற்பட்டது. மேலும், எழிலகம், பனகல் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் அரசு துறை அலுவலகங்கள் ஊழியர்கள் இல்லாமல் வெறிச்சோடின.

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கைது
பல்லடம் பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை போலீசார் கைது செய்தனர். இதே போல் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.

போராட்டம் தொடரும்
அனைத்து தாலுகா அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றியங்கள் முன்பாக நாளை மீண்டும் மறியல் நடைபெறும். நாளை மறுநாள் மாவட்ட தலைநகரங்களில் மறியல் நடக்கும். 26-ந்தேதி குடியரசு தினத்தன்று சென்னையில் கூடி அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்து அறிவிப்போம். எங்களை அழைத்து அரசு பேசி தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும் என ஜாக்டோ-ஜியோ
ஒருங்கிணைப்பாளர் அன்பரசு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications