Low Pressure: 3 காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும்.. இனி தான் பருவமழை ஆட்டம் இருக்கு! கனமழை விடாது.. டெல்டா வெதர்மேன்
சென்னை: அடுத்தடுத்து 3 காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளது எனவும், இதில் ஒரு புயல் உருவாகவும் சான்ஸ் இருப்பதாக டெல்டா வெதர்மேன் ஹேமசந்தர் கூறியுள்ளார். மேலும் தற்போது வரை நவம்பர் மாதத்தில் இயல்பை விட மழை குறைவாக பதிவாகியிருந்தாலும், இனி வரும் நாட்களில் பருவமழை தீவிரமடையும் எனவும் இதனால் இயல்பை விட அதிக மழைப்பொழிவு பதிவாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 16 ஆம் தேதி தொடங்கியது. பருவமழை தொடங்கும் 2 நாட்களுக்கு முன்பே தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. மேலும் இயல்பை விட அதிகமாகவே மழைப்பொழிவு இருந்தது.

3 காற்றழுத்த தாழ்வு நிலை
தொடர்ந்து மாத இறுதியில் மழை குறைந்தது. எனினும் அக்டோபர் மாதத்தில் இயல்பை விட அதிகமாக 23 செமீ மழை பதிவாகி இருந்தது. ஆனால் நவம்பர் மாதம் தொடங்கியதில் இருந்தே பெரிதாக கனமழை பெய்யவே இல்லை. மாறாக மாதத்தின் முதல் ஒரு வாரம் பல்வேறு இடங்களில் வெயில் சுட்டெரித்தது.
நவம்பரிலும் இயல்பைவிட அதிக மழை பெய்யும்
இந்த நிலையில் நவம்பர் மாதத்திலும் இயல்பை விட அதிகமாகவே மழை பெய்யும் என டெல்டா வெதர்மேன் ஹேமசந்தர் தெரிவித்துள்ளார். மேலும் அடுத்தடுத்து 3 காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் எனவும், இம்மாத இறுதியில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக டெல்டா வெதர்மேன் ஹேமசந்தர் கூறியிருப்பதாவது:-
வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதத்தில் இயல்புக்கு அதிகமாக அதாவது 23 செமீ என்ற அளவில் பெய்து இருந்தது. நவம்பர் மாதம் இயல்பாக 18 செமீ மழை பெய்யவேண்டும். தற்போதுள்ள 11 நாட்கள் படி 2.5 செமீ மழை மட்டுமே பதிவாகி இருக்கிறது. எனினும் வரும் நாட்களில் பெய்யும் மழை அதிகமாக இருப்பதால் இதனை ஈடுகட்டுவதோடு நவம்பரில் இயல்பை விட அதிகமாகவே மழை பெய்யும்.
மீண்டும் பருவமழை தீவிரமடையும்
தற்போது வடகிழக்கு பருவமழையில் சற்று இடைவெளி ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மழை குறைந்து காணப்படுகிறது. எனினும் வெப்பச் சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இனி வரும் நாட்களில் மழை அதிகமாக இருக்கும். நேற்று முன்தினம் முதல் வடகிழக்கு பருவகாற்று தமிழகத்தில் வீசத் தொடங்கியுள்ளது.
இதனால் மீண்டும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைய இருக்கிறது. குறிப்பாக நாளை மறுநாள் இலங்கையையொட்டிய தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும். இதனால் 16 ஆம் தேதி முதல் மழை பெய்யத் தொடங்கும். 17, 18 ஆம் தேதிகளில் ஒட்டுமொத்த கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும். ஒரு சில இடங்களில் மிக கனமழையும் பதிவாகக்கூடும்.
அடுத்தடுத்து 3 காற்றழுத்த தாழ்வுநிலை
தொடர்ந்து 19 ஆம் தேதி உள்மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் பரவலாக கனமழை பதிவாகும். இந்த தாழ்வுநிலை, தாழ்வுப்பகுதியாக வலுவடைந்து லட்சத்தீவு நோக்கி செல்லும் என கணிக்கப்படுகிறது. இருப்பினும் கிழக்கு திசை காற்றை ஈர்ப்பதால், 20ஆம் தேதியும் தமிழகத்தில் மழைக்கான சூழல் ஏற்படும். இதன்பின்னர் 21 முதல் 25 ஆம் தேதி வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும்.
இது தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்து, வட கடலோர மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்களில் கனமழையை கொடுக்கும். தமிழகத்தில் 25 ஆம் தேதி வரை வடகிழக்கு பருவமழை மாநிலம் முழுவதும் தீவிரம் அடைந்து காணப்படும். மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
புயல் உருவாக சான்ஸ்
இதனை தொடர்ந்து தெற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது அடுத்தடுத்த நிலைகளை கடந்து புயலாக கூட மாற சான்ஸ் இருக்கிறது. மேற்கண்ட இரு காற்றழுத்த தாழ்வு நிலைகள் எப்படி முடிகின்றது என்பதை பொறுத்தும், அது நிறைவடைந்த பின்னரும் இந்த புயல் எப்படி இருக்கும் எங்கு கரையை கடக்கும் என்ற விவரங்கள் முழுமையாக தெரியவரும். எப்படி இருப்பினும் நவம்பர் மாதத்தில் இப்போது வரை மழை பெய்யவில்லை என்றாலும் கூட இந்த மாத இறுதிக்குள் நல்ல மழை பெய்து இயல்புக்கு அதிகமாகவே மழை பதிவாக வாய்ப்பு உள்ளது. என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications