3 சம்பவங்கள்.. எதிலும் நிலையான முடிவு எடுக்க முடியல.. ஸ்டாலினை நேரடியாக தாக்கிய எடப்பாடி பழனிசாமி
சென்னை: தொழிலாளர் 12 மணி நேர வேலை என்ற மசோதா அறிவித்து பின்னர் நிறுத்தி வைப்பு, திருமண மண்டபங்களில் மதுபானம் வழங்கும் உரிமத்தை அறிவித்து பின்னர் ரத்து என அரசின் நிதானமற்ற கொள்கைகளால் மக்கள் அவதிப்படுகிறார்கள் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தொழில்நிறுவனங்களில் ஊழியர்களுக்கு தினமும் 12 மணி நேர வேலை வழங்கும் வகையில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திருத்தத்திற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்ததால் நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழக அரசு நேற்று அறிவித்தது.

இதேபோல் கல்யாண மண்டபங்களில் மதுபானம் பரிமாறலாம் என்று அரசாணை வெளியிட்டு அதுவும் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியதால் அந்த அரசாணையும் மாற்றி அறிவிக்கப்பட்டது. அடுத்தடுத்து இரண்டு விஷயங்களில் அரசின் நிலைப்பாடு யூடர்ன் ஆகிவிட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, திமுக அரசின் செயல்பாடுகளை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் அவர் கூறுகையில், "தொழிலாளர் 12 மணி நேர வேலை என்ற மசோதா அறிவித்து பின்னர் நிறுத்தி வைப்பு, திருமண மண்டபங்களில் மதுபானம் வழங்கும் உரிமத்தை அறிவித்து பின்னர் ரத்து, பள்ளி கல்வி துறையில் LKG வகுப்பு ரத்து என்ற அறிவிப்பு வெளியிட்டு மீண்டும் அதனை கொண்டு வந்தது என எதிலும் நிலையான முடிவு எதுவும் எடுக்கமுடியாத இந்த அரசின் நிதானமற்ற கொள்கைகளால் மக்கள் அவதிக்குள்ளவாது மிகுந்த வேதனைக்குரியது, கடுமையாக கண்டிக்கத்தக்கது.

இந்த நிர்வாக திறனற்ற அரசு, இனிவரும் காலங்களிலாவது, கார்ப்பரேட் நலனை மட்டுமே மனதில் கொள்வதை விடுத்து, மக்கள் நலனை மனதில் நிறுத்தி அவர்களின் வாழ்வியலுக்கு உகந்த கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டுமென மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்." இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications