"ஃபுல் ஃபோர்ஸ்".. ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு போலீஸ்.. சரசரவென இறங்கிய "மூன்றாவது கண்".. வேளச்சேரி?
சென்னை: சென்னைவாசிகளுக்கு நிம்மதியும், பாதுகாப்பு உணர்வும் ஏற்படும் வகையில் தமிழக அரசு அதிரடி ஏற்பாடுகளை செய்துள்ளது. என்ன தெரியுமா?
தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் நிகழாத வகையிலும், அவைகளை தடுக்கும் வகையிலும், கண்காணிப்பு கேமராக்கள் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ளன.
இந்த கேமராக்கள் மூலம் பல்வேறு குற்ற செயல்களும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் குற்றவாளிகளும் கைதாகி உள்ளனர்.
கேமராக்கள்: இந்த கேமரா இருப்பதாலேயே, குற்றங்களில் அவ்வளவாக ஈடுபடாமல் நழுவி செல்லும் ஆசாமிகளும் உண்டு. குற்றங்களை விரைவாகக் கண்டறியவும், வழக்கு தொடர சிறந்த ஆதாரங்களைவும் இந்த கேமராக்கள் திகழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்த கேமரா ஆங்காங்கே உள்ளதால்தான், பெண்கள், குழந்தைகளுக்கு பொது இடங்களில் பாதுகாப்பு உணர்வும் கிடைக்கிறது..

இப்போதைக்கு சென்னையில் 62,351 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன என்றாலும், மேலும் 2,730 இடங்களில் 8,189 சிசிடிவி கேமராக்கள் பொருத்த சென்னை போலீசார் திட்டமிட்டுள்ளனர்... இந்த கேமராக்களை கண்காணிக்க அந்தந்த அதிகார எல்லை ஆய்வாளர்களுக்கும் கூடுதல் பணி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த கேமராக்களில் ஏதேனும் ஒன்று பழுதானால்கூட, உடனடியாக சீரமைக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.
கன்ட்ரோல் மையம்: இந்த கேமராக்களை பழுதுபார்ப்பதற்கும் பராமரிப்பதற்கும் நடப்பாண்டில் 1.5 கோடியை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.. இந்நிலையில், வேளச்சேரி ஸ்டேஷனுக்குட்பட்ட 55 இடங்களில், ரூபாய் 32 லட்சம் செலவில் 150 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதுடன், அதற்கான கன்ட்ரோல் மையமும் வேளச்சேரி காவல் நிலையத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது.
இதேபோல், திருவான்மியூர் பகுதிகளில் 47 இடங்களில் ரூபாய் 24 லட்சம் செலவில் 124 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதற்கான சிசிடிவி கட்டுப்பாட்டு மையம் திருவான்மியூர் சிக்னல் அருகில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார். ஆக மொத்தம், 424 சிசிடிவி கேமராக்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.
நான்கு சக்கரங்கள்: இதைதவிர, நான்கு சக்கர, இருசக்கர ரோந்து வாகனங்கள் GPS கருவியுடன் இணைக்கப்பட்டு, இக்கட்டுப்பாட்டறையில், கண்காணிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.. இதன்மூலம் அவசர காலத்தில், குறிப்பிட்ட பகுதிக்கு ரோந்து வாகன உதவி தேவைப்படும் நேரத்தில் கட்டுப்பாட்டறையில் இருந்து கண்காணித்து அருகில் இருக்கும் ரோந்து வாகனத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு, விரைந்து சென்று நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.
இதுகுறித்து காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் சொல்லும்போது, "சென்னையில் இந்த ஆண்டு 424 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சென்னை முழுவதும் சிசிடிவி கேமராக்களை பொருத்துவதோடு மட்டுமல்லாமல், அவைகளை பராமரிப்பதற்காக தமிழக அரசு ரூபாய் 3.5 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. சென்னை முழுவதும் இருக்கும் 12 காவல் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை பராமரிப்பதற்காக தொழில்நுட்ப உதவி ஆய்வாளரை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றார்.












Click it and Unblock the Notifications