தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 444 பேர் பலி.. வெளியான புது லிஸ்ட்.. பீதி தேவையில்லை- விஜயபாஸ்கர்
சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் பட்டியலில் மேலும் 444 பேர் சேர்க்கப்படுவார்கள் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்த பட்டியல் இன்றைய அறிவிப்பில் சேர்க்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
சென்னையில் பிளாஸ்மா வங்கியை இன்று துவங்கி வைத்தார் அமைச்சர் விஜயபாஸ்கர். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உடன் இருந்தார்.
பேட்டியின்போது, விஜயபாஸ்கர் கூறியதாவது: சென்னையில் இதுவரை இரண்டு பேர் பிளாஸ்மா தானம் செய்துள்ளனர்.

பிளாஸ்மா தானம்
கொரோனா பாசிட்டிவ் ஆகியவருக்கு சிகிச்சை அளித்து குணமடைந்த 14 நாட்களுக்குப் பிறகு அவர்கள் பிளாஸ்மா தானம் வழங்கலாம். ஆனால், நீரிழிவு, இதய நோய், உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய் போன்ற, இணை நோய்கள் இருப்பவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முடியாது.
குளிர்ந்த நிலையில் பிளாஸ்மா வைக்கப்படும். ஓராண்டு வரை இதை பயன்படுத்த முடியும்.

பிற மருத்துவமனைகள்
கண்தானம், உடல்தானம் போன்றவற்றில் தமிழகம் முன்னிலையில் உள்ள மாநிலம். எனவே, பிளாஸ்மா தானம் விஷயத்திலும் தமிழகம் முன்னிலை வகிக்கும் என்று நம்புகிறேன். பிளாஸ்மா தானம் செய்வதற்கு குணமடைந்தவர்கள் முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையை தொடர்ந்து, ஸ்டான்லி மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை, டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம், திருச்சி, சேலம், கோவை, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் பிளாஸ்மா வங்கிகள் துவங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மதுரையில் இதுவரை நான்கு பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

444 பேர் கொரோனாவால் பலி
இதன்பின்னர் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: கொரோனாவால் மேலும் 444 பேர் இறந்துள்ளதாக தமிழக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. மார்ச் 1ம் தேதி முதல் ஜூன் 10ஆம் தேதி வரை விடுபட்ட மரணங்களை கண்டறிந்து சேர்க்கப்படுகிறது. மாரடைப்பு, தற்கொலை, புற்றுநோய் பாதிப்பு போன்ற பல்வேறு பாதிப்புகளால் கூட அவர்கள் இறந்திருக்கலாம். ஆனால் அவர்களுக்கு நோய்த்தொற்று இருந்துள்ளதால் அது கொரோனா மரணம் என்று கணக்கிடப்படும்.

காரணம் இதுதான்
பிற பாதிப்புகளால் இறந்ததால்தான் இந்த 444 பேரையும் கொரோனாவால் உயிரிழந்தோர் என்று மருத்துவர்கள் அறிவிக்காமல் இருந்தனர். ஆனால் மத்திய அரசு வழிகாட்டுதல்படி, வேறு காரணத்தால் இறந்தாலும், அவர்கள் உடலில் கொரோனா இருப்பது தெரியவந்திருந்தால், அதை கொரோனா பலியாக சேர்க்க வேண்டியுள்ளது. எனவே, அரசு தற்போது அதையும் சேர்க்குமாறு கேட்டுக் கொண்டதால் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்காக மருத்துவர் குழு ஒன்று அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மகாராஷ்டிராவில் கூட இவ்வாறு கொரோனா பலி எண்ணிக்கை பிறகு கூட்டப்பட்டது. இவ்வாறு ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அச்சம் வேண்டாம்
புதிதாக சேர்க்கப்பட்ட இறப்பு எண்ணிக்கை இன்றைய தினசரி புள்ளிவிவரத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் இறப்பு விகிதம் குறைவாக இருப்பதை, ஒரு சாதனையாக இதுவரை, பேசி வருகிறோம். ஆனால், இந்த எண்ணிக்கை அதிகரிப்பதால் இறப்பு விகிதம் என்பது அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதால் முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால், இதற்காக மக்கள் அச்சப்பட தேவையில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications