வளிமண்டல சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
சென்னை: தமிழகத்தில் நவம்பர் 8ஆம் தேதி வரை கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வளிமண்டல சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகின்றது. இதனால் கடந்த மூன்று தினங்களாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பரவலாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகின்றது.
தொடர்ந்து தென்தமிழக பகுதிகளின் மேல் நிலவுகின்ற வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக வரும் ஏழாம் தேதி வரைக்கும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

ஆரஞ்ச் அலர்ட்
இன்றைய நிலவரப்படி அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் திருவாரூர், மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய ஏழு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. அந்த ஏழு மாவட்டங்களுக்கும் நிர்வாக ரீதியாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனமழை பெய்ய வாய்ப்பு
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, அரியலூர் ஆகிய மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதே போல் புதுக்கோட்டை, மதுரை, தேனி ,சிவகங்கை ,விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

அதிக அளவு மழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக வடமாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால், அதிகபட்சமாக 200 மிமீ மழை கிடைக்கும் என்று, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வட சென்னையில் 300 மிமீ மழை பெய்தது. இது நவம்பர் மாதத்தில் வழக்கமாக பெய்யும் மழையை விட கூடுதல் ஆகும்.

டெல்டா மாவட்டங்களில் கனமழை
நேற்று முன்தினம் இரவு அந்த வளி மண்டல கீழடுக்கு சுழற்சி தெற்கு நோக்கி திரும்பி கடலூர், டெல்டா மாவட்டங்களை ஒட்டிய தமிழக பகுதிக்குள் வந்தது. அதனால் நேற்று முன்தினம் இரவு முதல் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது.

விடிய விடிய கனமழை
சீர்காழியில் 220 மிமீ மழை பெய்துள்ளது. தஞ்சாவூர் 200 மிமீ, கொள்ளிடம் 170மிமீ, சிதம்பரம் 150மிமீ, சேத்தியாதோப்பு, பரங்கிப்பேட்டை 120மிமீ, ராமநாதபுரம், சிவகங்கை 100 மிமீ, என பல்வேறு இடங்களில் மழை கொட்டித் தீர்த்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று மாலை முதல் விடிய விடிய இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டியது.

மிக கனமழை
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மாவட்டங்களில் இன்றும் மிக கனமழை பெய்யும். கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென் காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

நவம்பர் 8 வரை கனமழை
இதனிடையே தமிழகத்தில் நவம்பர் 8ஆம் தேதி வரை கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வளிமண்டல சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications