தாம்பரத்தில் இருந்து 5 எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கம்.. மின்சார ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க
சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், 5 எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. எனவே, பயணிகளின் வசதிக்காக மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பயணிகளுக்கு மின்சார ரயில் சேவைகள் பெரும் வரப்பிரசாதமாகஇருந்து வருகின்றன. சென்னையில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு மின்சார ரயில் சேவை மட்டும் இல்லையென்றால் நிலைமையை நினைத்துக்கூட பார்க்க முடியாது. அந்த அளவுக்கு பயணிகளின் போக்குவரத்துக்கு மின்சார ரயில் சேவை பெரும் பங்காற்றி வருகிறது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் காரணமாக எழும்பூர்-கொல்லம், எழும்பூர்-மதுரை, எழும்பூர்-மன்னார்குடி, எழும்பூர்-திருச்செந்தூர், எழும்பூர்-குருவாயூர் ஆகிய 5 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேற்று முன்தினம் முதல் தாம்பரத்தில் இருந்து இருமார்க்கமாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்களில் தாம்பரம் வரும் பயணிகளுக்காகவும், எக்ஸ்பிரஸ் ரயில் சேவையைப் பன்படுத்தும் பயணிகளின் வசதிக்காகவும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு இயக்கப்படவுள்ளது.
அதன்படி, இன்று (ஜூலை 20) முதல் வரும் ஆகஸ்டு 18 ஆம் தேதி வரையில் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: தாம்பரத்தில் இருந்து காலை 11 மணிக்கு சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயில், அதற்கு மாற்றாக தாம்பரத்தில் இருந்து அதிகாலை 3.15 மணிக்கு கடற்கரை செல்லும்.
கடற்கரையில் இருந்து மதியம் 12.15 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில், அதற்கு மாற்றாக அதிகாலை 4.25 மணிக்கு கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும். செங்கல்பட்டில் இருந்து காலை 9.50 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில் காலை 10.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படுவதற்கு மாற்றாக காலை 10.50 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும்.
கடற்கரையில் இருந்து காலை 11.52 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில், அதற்கு மாற்றாக காலை 11.55 மணிக்கு கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும். கடற்கரையில் இருந்து மதியம் 12.02 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில், அதற்கு மாற்றாக மதியம் 12.10 மணிக்கு கடற்கரையில் இருந்து புறப்பட்டு தாம்பரம் செல்லும்.
கடற்கரையில் இருந்து மதியம் 12.28 மணிக்கு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில், அதற்கு மாற்றாக மதியம் 12.25 மணிக்கு கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும். அரக்கோணத்தில் இருந்து காலை 7.30 மணிக்கு கடற்கரை வரும் மின்சார ரெயில், காலை 9.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படுவதற்கு மாற்றாக காலை 9.40 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும்.
மேற்கண்ட ரயில்கள் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை வாரநாட்களில் இயக்கப்படும் ரயில்கள் ஆகும். ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படும் ரயில்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சென்னை கடற்கரை-தாம்பரம் இருமார்க்கமாக கூடுதலாக ஒரு சிறப்பு ரயில் மட்டும் இயக்கப்பட உள்ளது. அதன்படி, தாம்பரத்தில் இருந்து அதிகாலை 3.15 மணிக்கு கடற்கரைக்கும், மறுமார்க்கமாக கடற்ரையில் இருந்து அதிகாலை 4.25 மணிக்கு தாம்பரத்திற்கும் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications