எல்லை தாண்டி மீன்பிடிப்பு.. சென்னை அருகே 5 இலங்கை மீனவர்கள் கைது.. இந்திய படை அதிரடி!
எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 5 பேர் இந்திய கடலோர காவல்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை: எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 5 பேர் இந்திய கடலோர காவல்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திரா அருகே இந்திய கடலோர காவல்படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, எல்லை தாண்டி வந்து இலங்கை மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, அங்கு விரைந்து சென்ற கடலோர காவல்படையினர் படகில் இருந்த 5 இலங்கை மீனவர்களை கைது செய்தனர்.
மேலும், அவர்களிடம் இருந்து படகை பறிமுதல் செய்த கடலோர காவல்படையினர், மீனவர்களை சென்னை துறைமுகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
கச்சத் தீவு அருகே மீன் பிடிக்கும், தமிழக மீனவர்களை எல்லைத் தாண்டி வந்து மீன் பிடிப்பதாக கூறி அவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கொலைவெறி தாக்குதல் நடத்துவது தொடர்கதையாகி உள்ளது. வலைகளை சேதப்படுத்தி, படகுகளை பறிமுதல் செய்து தமிழக மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கையும் தொடர்கிறது.
தங்களை பாதுகாக்க தமிழக மீனவர்கள் பல முறை மத்திய, மாநில அரசுகளிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தும் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், இலங்கை மீனவர்களும் அடிக்கடி எல்லை தாண்டும் சம்பவங்களும் அவ்வப் போது நடந்து வருகிறது. இலங்கை சிறைகளில் தமிழக மீனவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் வாடிவருவது குறிப்பிடத்தக்கது.