500 பெண்களை வீழ்த்தி பிசினஸ்மேன் காதல் வலை.. 24 பர்கனாஸில் சிக்கிய 2 கோடி ரூபாய்.. பகீர் பின்னணி
சென்னை: மேற்கு வங்க மாநிலம் 24 பர்கனாஸ் மாவட்டத்தில், சமூக வலைதளங்கள் மற்றும் டேட்டிங் செயலிகள் மூலம் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவரை சைபர் கிரைம் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். நாடு முழுவதும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண்களை தன்னுடைய வசீகரப் பேச்சால் மயக்கி, சுமார் 2 கோடி ரூபாய் வரை அவர் சுருட்டியுள்ள அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சமீபத்தில், மேற்கு வங்க சைபர் கிரைம் போலீசாருக்கு மெயில் மூலம் புகார் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், "வைபவ் அரோரா" என்ற பெயரில் ஒரு நபரை, நான் டேட்டிங் செயலி மூலம் சந்தித்தேன்.. தன்னை ஒரு பெரிய தொழிலதிபர் என்று அவர் என்னிடம் அறிமுகம் செய்து கொண்டார்.

தொழிலதிபர் பண மோசடி
பிறகு இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் வழியாகத் தொடர்ந்து பேசி என்னிடம் நம்பகத்தன்மையை அதிகப்படுத்தி கொண்டார்.. ஒருகட்டத்தில் என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி நெருக்கமானார்.
அன்பாக பேசி காரியத்தை சாதிப்பதில் வல்லவர் அவர்.. தன்னுடைய மருத்துவ தேவைக்காக அவசரமாகப் பணம் வேண்டும் என்று கூறி, என்னிடமிருந்து 7 லட்சம் ரூபாயை பறித்து கொண்டார்.. பணத்தை வாங்கிய பிறகு, ஆனந்த் என்பவரை, தன்னுடைய குடும்ப உறவினர் என்று சொல்லி , சமூக வலைதளங்கள் வாயிலாகப் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்..
7 லட்சம் ரூபாய்
சில மாதங்கள் கழித்து என்னுடைய பணத்தை வைபவ் அரோராவிடம் திருப்பி தருமாறு கேட்டேன். உடனே என்னுடனான தொடர்புகளை துண்டித்து கொண்டார்.. இதனால் அதிர்ச்சியடைந்த நான், அவரது உறவினரான ஆனந்தை தொடர்பு கொண்டபோது, வைபவ் இறந்துவிட்டதாக சொன்னார்.. இதைக்கேட்டு நான் மேலும் அதிர்ச்சி அடைந்தேன்.
பணமும் பறிபோய், காதலித்த நபரும் இறந்துவிட்டதாக சொன்னதால் எனக்கு சந்தேகம் வலுத்துள்ளது. எனவே இது தொடர்பான உண்மையை வெளிக்கொணர வேண்டும் என்று தன்னுடைய புகாரில் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரை பெற்றுக் கொண்ட சைபர் கிரைம் போலீசார், வைபவ் மொபைல் போன் எண்களை வைத்து தீவிரமாகப் புலனாய்வு செய்தனர். அப்போது அந்த செல்போன் நம்பர் 24 பர்கனாஸ் மாவட்டத்தில் பயன்பாட்டில் இருப்பது கண்டறியப்பட்டது. உடனே தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று நடத்திய அதிரடி சோதனையில், ஆனந்த் குமார் (35) என்பவரை மடக்கிப் பிடித்தனர்.
500 பெண்களுக்கு காதல் வலை
அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது விசாரணையில் வெளிவந்த உண்மைகள் போலீசாரையே அதிர வைத்தன. அதாவது கைது செய்யப்பட்ட ஆனந்த் குமார், நாடு முழுவதும் சுமார் 500 பெண்களை ஏமாற்றியுள்ளாராம்..
வக்கீல், டாக்டர், தொழிலதிபர், சினிமா தயாரிப்பாளர் எனப் பல்வேறு வேடங்களில் நடித்து பெண்களைத் தனது வலையில் விழ வைத்துள்ளார். இப்படி பெண்களை ஏமாற்றி இதுவரை சுமார் 2 கோடி ரூபாய் வரை இவர் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. பணம் தர மறுக்கும் பெண்களின் அந்தரங்க போட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியும் இவர் பணம் பறித்துள்ளார்.
ஆனந்த் குமாரிடமிருந்து 4 ஸ்மார்ட் போன்கள், 3 வங்கிக் கணக்குகள், 4 தங்க பிரேஸ்லெட்டுகள் மற்றும் 5 தங்கச் சங்கிலிகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தற்போது இவரிடம் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவம் டேட்டிங் செயலிகளைப் பயன்படுத்தும் பெண்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.














Click it and Unblock the Notifications