₹5000, ₹1499 என வரும் அந்த லிங்க்.. ஜன்தன் யோஜனா ஆஃபர்? கிளிக் பண்ணினா என்ன ஆகும் தெரியுமா?
சென்னை: தேர்தல் நேரத்தில் ஃபேக் லிங்க் மோசடிகள் எக்கச்சக்கமாக பரவி வருகின்றன.. குறிப்பாக, "ஜன்தன் திட்டம் ₹5,000", "விஜய் ₹1,499 ஆஃபர்', "ஜிபே ரிவார்டு" போன்ற பெயர்களில் வரும் லிங்குகள் மக்களை குறிவைக்கின்றன. சோஷியல் மீடியாவிலும், ஜிபே, போன் பே, டெலிகிராம் வழியாகவும் இதுபோன்ற போலி ஆஃபர்கள் OTP மற்றும் வங்கி தகவல்களை திருடும் அபாயத்தை ஏற்படுத்துகின்றன. அதனால்தான் சைபர் கிரைம் போலீசார் இதுகுறித்து அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அது என்ன?
தேர்தல் திருவிழா களைகட்டியுள்ள வேளையில், பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் மோசடி கும்பல்கள் தற்போது தீவிரமாக களம் இறங்கியுள்ளன.

அரசியல் கட்சிகளின் பெயர்களையும், பிரபலங்களின் செல்வாக்கையும் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் இந்த புதிய வகை டிஜிட்டல் மோசடிகள் குறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் மிக முக்கியமான எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர். குறிப்பாக, சமூக வலைதளங்களில் வலம் வரும் கவர்ச்சிகரமான லிங்க்குகள் மூலம் மக்களின் வங்கிக் கணக்குகளை காலி செய்யும் வேலைகள் அரங்கேறி வருகின்றன.
'ஹோலி ஸ்பெஷல்' என்ற பெயரில் ஒரு செய்தி மிக வேகமாக இணையத்தில் பரப்பப்படுகிறது. அதில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் போட்டோக்களை பயன்படுத்தி, ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் இணைந்தால் 5,000 ரூபாய் சலுகை பெறலாம் என ஒரு போலி இணைய முகவரி அனுப்பப்படுகிறது.
இதனை உண்மை என நம்பி கிளிக் செய்பவர்கள் தங்கள் விவரங்களை இழக்கும் அபாயம் உள்ளது. இதேபோல், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஒவ்வொரு குடிமகனுக்கும் 1,499 ரூபாய் வழங்குவதாகக் கூறி, "கெட் ஆஃபர்" என்ற பகுதியை கிளிக் செய்ய சொல்லி ஒரு மோசடி லிங்க் வலம் வருகிறது. அரசியல் தலைவர்களின் பெயர்களைப் பயன்படுத்துவதன் மூலம் மக்கள் எளிதில் நம்பிவிடுவார்கள் என்பதே இந்த கும்பலின் திட்டமாக இருக்கிறது.
பணப் பரிவர்த்தனை செயலிகளான ஜிபே மற்றும் போன் பே போன்றவற்றின் பெயரிலும் தந்திரமான மோசடிகள் நடக்கின்றன. ஜிபே செயலியில் நாம் வழக்கமாக பார்க்கும் ஊதா நிற ரிவார்டு அட்டையைப் போலவே, "வின்சூ" என்ற பெயரில் நீல நிற அட்டையில் குறிப்பாக ஒரு பகுதியை மட்டும் சுரண்டுமாறு கூறி லிங்க் அனுப்பப்படுகிறது. இதன் மூலம் பயனாளர்களை ஏமாற்ற முயற்சிக்கின்றனர்.
சில சமயம் இப்படியான லிங்க்கள் APK கோப்புகளை பதிவிறக்கம் செய்யத் தூண்டி, மொபைலில் தீங்கிழைக்கும் மென்பொருளை நிறுவவும் வழிவகுக்கின்றன. போன் பே பெயரில் கேஷ்பேக் ஆபர் தருவதாகக் கூறி அனுப்பப்படும் லிங்க்குகளும் இந்த வரிசையில் அடங்கும்.
இவை தவிர, டெலிகிராம் செயலியில் ஆபாசப் படங்கள் இருப்பதாகக் கூறி நமக்குத் தெரிந்தவர்களின் பெயரிலேயே லிங்க்குகள் அனுப்பப்படுகின்றன. அந்த லிங்க்கை தொட்டவுடன் மொபைல் போனுக்கு ஓடிபி எண் வரும், அதை உள்ளிட்டவுடன் உடனடியாக கணக்கு ஹேக் செய்யப்படுகிறது. பிறகு அதிலிருந்து வெளியே வர வேண்டுமானால் டெலிகிராம் பிரைம் மெம்பர் ஆக வேண்டும் என கூறி, வங்கி விவரங்களை கேட்டு மேலும் ஒரு லிங்க் அனுப்பப்படுகிறது. அவற்றை பகிர்ந்தால் கணக்கிலிருந்து பணம் பறிபோகும் அபாயம் உள்ளது.
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வரும் சைபர் கிரைம் போலீசார், இது வடமாநிலத்தை சேர்ந்த மோசடி கும்பல்களின் கைவரிசையாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கின்றனர்.
தேர்தல் நேரத்தைப் பயன்படுத்தி இவ்வகை மோசடிகள் நடைபெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை பணத்தை இழந்ததாகப் புகார்கள் வரவில்லை என்றாலும், முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
ஃபேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராமில் இதுபோன்ற லிங்க்கள் வந்தால் அவற்றை கண்டுகொள்ளாமல் தவிர்க்க வேண்டும். ஜிபே, போன் பே போன்ற அதிகாரப்பூர்வ செயலிகளுக்குள்ளேயே வரும் சலுகைகளை மட்டுமே மக்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும், அறிமுகமில்லாத இணைய முகவரிகளை நம்பி வங்கி விவரங்களையோ ஓடிபி எண்களையோ பகிரக் கூடாது" என்று காவல்துறை திட்டவட்டமாக எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications