ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்.. 5000 பக்கங்கள்.. கொலையில் சம்பந்தப்பட்ட 30 பேர்
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் 30 பேர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது காவல்துறை. 5,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை பெரம்பூரில் கடந்த ஜூலை மாதம் 5 ஆம் தேதி, பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கை ஒரு கும்பல் வெட்டிப் படுகொலை செய்தது. உணவு டெலிவரி செய்வது போல் இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள், ஆம்ஸ்ட்ராங்கை கொடூரமாக வெட்டிக் கொன்றனர்.

ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திருவேங்கடம், திருமலை, மணிவண்ணன், சந்தோஷ், ராமு, கோகுல், விஜய், சிவசக்தி என அடுத்தடுத்து காவல்துறையின் கைது நடவடிக்கையில் பெரும் கும்பல் சிக்கியது. அடுத்தடுத்த விசாரணையில் திமுக வழக்கறிஞர் அருள், திமுக நிர்வாகி குமரேசனின் மகன் சதீஷ், அதிமுக நிர்வாகிகள் மலர்கொடி, ஹரிதரன், காங்கிரஸ் நிர்வாகி ஹரிஹரன், பாஜக நிர்வாகி செல்வராஜ் என பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சிக்கினர்.
தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளரும் வழக்கறிஞருமான அஸ்வத்தாமன் மற்றும் அவரது தந்தை பிரபல ரவுடி நாகேந்திரன், ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியும் காதலியான பாஜக நிர்வாகியான பெண் தாதா அஞ்சலை என கைது படலம் நீண்டது. வழக்கறிஞர் சிவா, பிரதீப், முகிலன், அப்பு, நூர் விஜய், ராஜேஷ், கோபி, குமரன், புதூர் அப்பு என 28 பேரை கைது செய்தது காவல்துறை.
அவர்களில் திருவேங்கடம் என்பவர் என்கவுன்டரில் கொல்லப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை பறிமுதல் செய்வதற்காக, கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட திருவேங்கடம், காவல்துறையினரால் என்கவுன்டர் செய்யப்பட்டார்.
ஆற்காடு சுரேஷின் நண்பரான சீசிங் ராஜாவை கடந்த இரண்டு மாதங்களாக தேடி வந்த காவல்துறையினர், அண்மையில் ஆந்திராவில் கைது செய்து அவரை விசாரணைக்காக வேளச்சேரி காவல்துறையினர் அழைத்துச் சென்ற நிலையில், சீசிங் ராஜா என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் தொடர்புடையவர்களாக கருதப்படும் பாம் சரவணன், சம்போ செந்தில் என்ற சம்பவம் செந்தில், வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் ஆகியோர் தலைமறைவாக உள்ள நிலையில், அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். சம்போ செந்திலின் கூட்டாளியான மொட்டை கிருஷ்ணன் வெளிநாட்டிற்கு குடும்பத்துடன் தப்பியோடியதாக கூறப்படும் நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 30 பேர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது காவல்துறை. 5,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 28 பேரோடு, சம்போ செந்தில், மொட்டை கிருஷ்ணன் ஆகியோருடன் சேர்த்து 30 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள 28 பேரில் 25 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் விரைவில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என அண்மையில் சென்னை மாநகர காவர் ஆணையர் அருண் தெரிவித்திருந்த நிலையில் தற்போது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications