சென்னைவாசிகளே சொந்த ஊருக்கு கிளம்பியாச்சா.. வந்தாச்சு அறிவிப்பு.. டிஎன்எஸ்டிசி வெளியிட்ட குட்நியூஸ்
சென்னை: தைப்பூச விழா (வியாழன்), குடியரசு தினம் (வெள்ளி), 27-ந் தேதி (சனிக்கிழமை), 28 (ஞாயிற்றுக்கிழமை) என தொடர் விடுமுறை வருவதால் தமிழகம் முழுவதும் 580 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
தைப்பூச விழா (நாளை), குடியரசு தினம் (நாளை மறுதினம்), ஜன 27-ந் தேதி (சனிக்கிழமை), ஜன 28 (ஞாயிற்றுக்கிழமை) என தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறையாகும். இதையொட்டி சென்னையில் இருந்து மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்கள், கோவை, ஈரோடு மாவட்டங்களில் ரயில்களில் டிக்கெட் என்பதே இல்லை. தட்கலில் டிக்கெட் கிடைப்பது யானை பசிக்கு சோளப்பொறி போல் தான். ஆனாலும் அவ்வளவு எளிதில் புக்கிங் செய்துவிட முடியாது. ஆம்னி பேருந்துகளில் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு டிக்கெட் விலை தாறுமாறாக உள்ளன. இதனால் பொதுமக்கள், சாமானிய மக்கள் அரசு பேருந்துகளையே பெரிதும் நம்பி உள்ளனர். இந்நிலையில் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் தமிழகம் முழுவதும் 580 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
தைப்பூசம், குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை (வியாழக்கிழமை) முதல் 28-ந் தேதி வரை தொடர் விடுமுறை நாட்கள் வருவதால், இன்றும், நாளையும் சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம். இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு இன்று மற்றும் நாளை தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 405 சிறப்பு பஸ்களும் மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து அதாவது கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் போன்ற இடங்களில் இருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூருவில் இருந்து பிற இடங்களுக்கும் 175 சிறப்பு பேருந்துகள் என ஆக மொத்தம் 580 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமை அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் முன்பதிவு: இன்று சென்னையில் இருந்து 5 ஆயிரத்து 722 பயணிகளும், நாளை 7 ஆயிரத்து 222 பயணிகளும் பயணம் மேற்கொள்வதற்காக முன்பதிவு செய்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை அன்று 15 ஆயிரத்து 669 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் தங்களது பயணத்திற்கு முன்பதிவு செய்து பயணிக்கலாம். இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியை பயன்படுத்தி தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம்" இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications