அசைவ பிரியரா நீங்கள்? மீன்கள் விலை அடுத்த சில நாட்களில் பல மடங்கு உயரும்... காரணம் இதுதான்
சென்னை: மீன்களின் இனப்பெருக்க காலத்தையொட்டி வங்கக் கடலில் மீன்பிடிக்க விதிக்கப்பட்டுள்ள தடைக் காலம் இன்று தொடங்கும் நிலையில், மீனவர்கள் தங்கள் படகுகளைப் பழுது பார்க்கும் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.

இந்தியாவில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் தொடங்கி 61 நாட்கள் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படும். இந்த காலகட்டத்தில் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் என்பதால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையின் மூலம் மீன்களின் இனப்பெருக்கம் அதிகரிக்கும். இதனால் கடலில் ஒட்டுமொத்தமாக மீன்கள் வேட்டையாடப்படுவது கட்டுப்படுத்தப்படும்.
இந்தாண்டு இன்று நள்ளிரவு தொடங்கும் தடை காலம் வரும் ஜூன் 14ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடை காலத்தில் மோட்டர் படகுகளைப் பயன்படுத்தி ஆழ்கடலுக்குச் சென்று மீன்பிடிக்க அனுமதி இல்லை. அதேநேரம் நாட்டுப்படகில் சென்று கடலோர பகுதிகளில் மீன் பிடிக்கலாம்.
இரண்டு மாதங்களுக்குத் தடை காலம் அமலில் இருக்கும் என்பதால் மீனவர்கள் தங்கள் படகுகளைப் பழுது பார்க்கும் பணிகளைத் தொடங்கியுள்ளனர். மீன்பிடி வலை, என்ஜின்களை பழுது பார்க்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், தற்போது நாட்டுப்படகில் மட்டுமே சென்று மீன்பிடிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் குறைந்த அளவு மீன்களே கிடைக்கும். 61 நாட்கள் மீன்பிடி தடைக் காலம் இருக்கும் என்பதால் வரும் நாட்களில் மீன்களின் விலை பல மடங்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீன்பிடி தடைக் காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் மீனவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 81.96 ரூபாய் என்ற விகிதத்தில், ரூபாய் 5,000 நிவாரண தொகையை அரசு வழங்குகிறது.












Click it and Unblock the Notifications