தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு
சென்னை: நிர்வாக வசதிக்காக அவ்வப்போது அரசு துறைகளில் பணியிட மாற்றங்கள் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், காவல்துறை உயர் அதிகாரிகள் 7 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 7 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:- மாநில குற்ற ஆவண காப்பக போலீஸ் சூப்பிரண்டு ஆக இருந்த கலைச்செல்வன் சென்னை தலைமையக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டாக மாற்றம் செய்யப்பட்டார். அதேபோல், சென்னை தலைமையக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பில் இருந்த மகேஷ்வரன், சென்னை நவீன கட்டுப்பாட்டு அறை துணை கமிஷனராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

இதுவரை சென்னை நவீன கட்டுப்பாட்டு அறை துணை கமிஷனராக இருந்து வந்த ஆரோக்கியம் என்ற அதிகாரி, சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு-3-ன் துணை ஆணையராக மாற்றப்பட்டு இருக்கிறார். அதேபோல், இதுவரை சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு 3-ன் துணை ஆணையராக இருந்து வந்த ஸ்டாலின், சென்னை மத்திய குற்றப்பிரிவு 1-ன் துணை ஆணையராக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மத்திய குற்றபிரிவு 1-ன் துணை கமிஷனர் பதவி வகித்து வந்த நாக ஜோதி, மாநில குற்ற ஆவண காப்பகத்தின் போலீஸ் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார். சேலம் நகர துணை ஆணையர் (தெற்கு) ராஜேந்திரன், கோவை நகர போக்குவரத்து துணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோவை நகர போக்குவரத்து துணை ஆணையராக இருந்த மதிவாணன் சேலம் நகர துணை ஆணையராக (தெற்கு) இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications