என்னாச்சு.. தமிழகத்தில் சதம் அடித்த ஓமிக்ரான் வைரஸ்.. மேலும் 74 பேருக்கு பாதிப்பு உறுதி!
சென்னை: சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொடிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில் புதிய வகை உருமாறிய ஓமிக்ரான் வைரஸ் பரவி வருவது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த ஓமிக்ரான் வைரஸ் மிகவும் ஆபத்தானது என்று உலக சுகாதார அமைப்பும் எச்சரிக்கை விடுத்துள்ளது. முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்ட மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் ஜனவரி 10 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. புதிய கட்டுபாடுகள் அறிவிப்பு.. முழு விவரம் இதோ!
பயமுறுத்தும் ஓமிக்ரான்
மேலும் டெல்டாவை வைரஸை விட இது வீரியம்மிக்கது என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறுவதாக தகவல்கள் வருகின்றன. ஓமிக்ரானை தடுக்கும் வகையில் இந்தியாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வந்திருந்த நிலையில் அதனையும் தாண்டி ஓமிக்ரான் வைரஸ் புகுந்து விட்டது. முதன் முதலில் கர்நாடகாவில்தான் ஓமிக்ரான் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது.
தமிழ்நாட்டிலும் ஓமிக்ரான்
அதன் பிறகு மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு என்று பல மாநிலங்களுக்கும் பரவியது. இந்தியாவில் இதுவரை 1,200-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளது.
தமிழகத்திலும் ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் ஏற்கனவே 46 பேருக்கு ஓமிக்ரான் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.
120 ஆக அதிகரிப்பு
அவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாராத்துறை தெரிவித்துள்ளது.
இதனால் தமிழ்நாட்டில் ஓமிக்ரான் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளது.
64 பேர் குணமடைந்து விட்டனர்
இந்த 120 பேரில் 64 பேர் குணமடைந்து விட்டதாகவும் தமிழக சுகாதாராத்துறை கூறியுள்ளது.ஓமிக்ரான் மேலும் பரவாமல் இருக்க வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு 7 நாள் தனிமை கட்டாயம் என்று தமிழக அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஓமிக்ரானும், கொரோனாவும் சேர்ந்து வேகமாக பரவி வரும் நிலையில் ஜனவரி 10-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.