வீடு இடிந்து 9 பேர் பலி - முதல்வர் ஸ்டாலின் இரங்கல், தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டில் வீடு இடிந்து விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
சென்னை: வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் வீடு இடிந்து விழுந்து 9 பேர் உயிரிழந்துள்ளனர் 4 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அரசு அதிகாரிகளின் எச்சரிக்கையையும் மீறி வீட்டில் தங்கியதால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ. 5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் நிவரண உதவி அறிவித்துள்ளார் மு.க ஸ்டாலின்.
Recommended Video
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. பேரணாம்பட்டு பகுதியில் கடந்த சில தினங்களாக பலத்த மழை கொட்டியது. இதனால் பேர்ணாம்பட்டு ரங்கம்பேட்டை கானாற்றில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

குல்ஷார் வீதி , அஜிஜியா வீதிகளில் கானாற்று வெள்ளம் புகுந்த காரணத்தால் அங்கு வசித்து வந்த 100க்கும் மேற்பட்டோர் அந்த பகுதியில் உள்ள பள்ளிவாசல், மசூதி மற்றும் பள்ளிக் கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தொடர் மழை பெய்து வருவதால் அஜிஜியா வீதியில் உள்ள பொதுமக்கள் வீட்டு மாடிகளில் தங்கினர். இந்த வீதியிலுள்ள யுனானி வைத்தியர் மர்கூப் அஸ்லாம் அன்சாரி என்பவருடைய மனைவி அனிஷா பேகம்,63 மற்றும் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த வீட்டின் மாடியில் ஆசிரியை கவுசர், 45 அவரது மகள் மகபூப் தன்ஷிலா, 27 ஆகியோர் வசித்து வந்தனர்.
இதற்கிடையில், நேற்று இரவு பலத்த மழை பெய்து தெருவில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழையின் காரணமாக வாடகைக்கு குடியிருந்த கவுசர் மற்றும் அவருடைய மகள் ஆகியோர் அனுஷா பேகம் வீட்டில் வந்து தங்கினர். மேலும் அக்கம் பக்கத்தினரும் அந்த வீட்டிற்கு வந்து தங்கி உள்ளனர்.
குழந்தைகள் உள்பட மொத்தம் 13 பேர் அந்த வீட்டில் நேற்று இரவு படுத்து தூங்கினர். இந்நிலையில், கனமழை காரணமாக அந்த வீடு இன்று அதிகாலை 6 மணிக்கு திடீரென முழுவதுமாக இடிந்து விழுந்தது. இதனால், வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கினர். பயங்கர சத்தத்துடன் வீடு இடிந்ததால் அந்த பகுதி பொதுமக்கள் வெளியே ஓடி சென்று பார்த்தனர். அப்போது வீடு இடிந்து தரைமட்டமாகி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

ஆற்றின் கரையோரம் வசித்தவர்கள் வெளியேற்றி பேர்ணாம்பட்டில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு முகாமுக்கு அழைத்து சென்றனர் ஆனால் இரண்டு குடும்பத்தினர் மட்டும் முகாமுக்கு செல்லாமல் வீட்டிலேயே தங்கியிருந்தனர் வெள்ளம் அதிகமானதால் வீட்டின் அருகில் மண் அரிப்பு ஏற்பட்டு வீடு தரைட்டமானது. இதுகுறித்து காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் அங்கிருந்த பொதுமக்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
வீட்டில் இருந்த அனிஷாபேகம்,63,ரோகிநாஸ்,27,கௌசர்,45,தன்சிலா,27,அபிரா,3,மனுல்லா,8,தாமேத்,2,அப்ரா,4,மிஸ்பா பாத்திமா,22 ஆகிய 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிந்தனர். அனைவரின் உடல்களும் மீட்கப்பட்டன. அந்த குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு பேர்ணாம்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் அந்த வீட்டில் மொத்தம் 13 பேர் இருந்தனர் இறந்தவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் அதிகாரிகளின் எச்சரிக்கையையும் மீறி இவர்கள் வீட்டில் இருந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
மழை வெள்ளத்தில் வீடு இடிந்து விழுந்து 9 பேர் பலியானது பேர்ணாம்பட்டு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ. 5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் நிவரண உதவி அறிவித்துள்ளார் மு.க ஸ்டாலின். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் கனமழையால் வீடு இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன். காயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன் எனவும் முதல்வர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications