பெண் காவலரிடமே 9 பவுன் செயின் பறிப்பு.. முடக்கப்பட்டதா சென்னையின் 3-வது கண்?.. "ஆபரேஷன்" எப்போது?
சென்னை: சென்னையில் பெண் காவலரிடம் 9 சவரன் தங்க நகைகளைப் பறித்துவிட்டு தப்பிச் சென்ற குற்றவாளிகளை போலீஸார் வலைவீசித் தேடி வருகின்றனர். சென்னையில் இருந்த மூன்றாவது கண்களுக்கு என்னவாயிற்று?
சென்னை சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருபவர் கவிதா (31). இவர் நேற்று சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதி பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதற்காக சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் இருந்து காவலரான விஜயகுமார் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சிவாநந்தா சாலை வழியாக வந்துள்ளார்.
அப்போது பின் தொடர்ந்து மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள் பெண் காவலர் கவிதா அணிந்திருந்த 7 சவரன் தாலிச் சரடையும் 2 சவரன் தங்கச் சங்கிலியையும் பறித்துக் கொண்டு தப்பினர்.

காவலர் கவிதா
இந்த செயின் பறிப்பு சம்பவத்தால் காவலர் கவிதாவின் கழுத்தில் சிறு சிராய்ப்புகள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக பெண் காவலர் கவிதா அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் மூன்றாவது கண்
இது போன்ற திருட்டுச் சம்பவங்களை பார்க்கும் போது சென்னையில் மூன்றாவது கண் (கண்காணிப்பு கேமராக்கள்) வேலை செய்யவில்லையோ என நினைக்கத் தோன்றுகிறது. சென்னை காவல் துறை ஆணையராக இருந்த ஏகே விஸ்வநாதன் முக்கிய இடங்களில் மூன்றாவது கண் எனப்படும் சிசி டிவி கேமராக்களை பொருத்தினார். மொத்தம் 3 லட்சம் கேமராக்கள் பொருத்தப்பட்டது. இதன் மூலம் திருட்டுச் சம்பவங்கள், செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு வெகுவாக குறைந்திருந்தது.

கேமரா சிசிடிவி
காரணம், இந்த கேமராவின் சிசிடிவி காட்சியை ஆய்வு செய்யும் போலீஸார், குற்றம் சாட்டப்பட்டவர்களை உடனடியாக பிடித்து விடுவதால் குற்றம் செய்ய சிலர் அஞ்சி இருந்தனர். ஆனால் தற்போது ஒரு பெண் காவலரிடமே செயின் பறித்து சென்றுள்ளார்கள் என்றால் மூன்றாம் கண்கள் வேலை செய்யவில்லையா? என்ற கேள்வி எழுகிறது. இது போன்ற திருட்டுகள் பழைய வழக்கு செலவுக்காகவும், போதை பழக்கம், முறையற்ற வாழ்க்கைக்கு பழகியவர்களால் செய்யப்படுவதாக சிலர் கூறுகிறார்கள்.

பெருகி வரும் போதைப்பழக்கம்
போதைப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள் அதற்கான பணத்தேவைக்காகவும், முறையற்ற வாழ்க்கைக்கு தேவைப்படும் பணத்தை ஈட்டவும் இது போன்று புது திருடர்களும் முளைப்பதாக கள நிலவரங்கள் சொல்கின்றன. எனவே சிசிடிவி கேமரா இல்லாத இடங்களில் கேமராக்களை பொருத்த வேண்டும். பழுதாகியுள்ள சிசிடிவி கேமராக்களை பழுது நீக்கம் செய்ய வேண்டும். அப்போதுதான் சென்னை மீண்டும் அமைதிப்பூங்காவாக செயல்படும் என தெரிகிறது.

இரவு நேரம்
பெண்கள் எப்போது இரவு நேரத்திலும் சுதந்திரமாக நடமாடுகிறார்களோ அன்றுதான் உண்மையான சுதந்திரம் அடைந்துவிட்டதாக அர்த்தம் என காந்தியடிகள் தெரிவித்திருந்தார். அவரது கூற்றுக்கேற்ப இன்றைய தினம் பெண் அல்ல ஒரு அதிகாரத்தில் இருக்கும் பெண் போலீஸிடமே திருடர்கள் கைவரிசையை காட்டியுள்ளார்கள். இது பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆன நிலையில் பல்வேறு மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றி பலரிடம் பாராட்டு பெற்று வருகிறது. இந்த நிலையில் இது போன்ற குற்றச்சம்பவங்களை அரசு குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள். திருட்டு மட்டுமல்ல பட்டப்பகலில் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் சீண்டல்கள் உள்ளிட்ட சம்பவங்களை தடுக்க அரசு போர்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் என்பதை தமிழக மக்களின் கோரிக்கையாகும்.












Click it and Unblock the Notifications