தந்தை பெரியாருக்கு பாரத ரத்னா விருது- திருமாவளவன் கோரிக்கையை முன்வைத்து அனல் பறக்கும் விவாதம்!
சென்னை: தந்தை பெரியாருக்கு பாரத ரத்னா விருது தர வேண்டும் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் லோக்சபாவில் வலியுறுத்தியிருப்பது விவாதத்தை உருவாக்கி உள்ளது.
லோக்சபாவில் பேசிய விசிக தலைவர் தொல்.திருமாவளவன், ஒரே நாடு ஒரே கலாச்சாரம் ஒரே மொழி ஒரே மதம் என்கிற கொள்கைகளை முழங்கி இந்த நாட்டை பிளவுபடுத்துவதற்கான அனைத்து வேலைகளையும் இந்திய இன்றைய ஆட்சியாளர்கள் செய்து வருகிறார்கள் என்பது வேதனை அளிக்கிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் நாட்டை பிளவுபடுத்துவதாக குற்றம் சுமத்துவது எந்த வகையிலும் ஏற்புடையது இல்லை. புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார் "வடக்கு தெற்கு என்கிற பாகுபாடு வளர்கிறது". ராஜாஜி என்ற ராஜகோபாலாச்சாரியார் அவர்களே இந்த கவலையை பதிவு செய்திருக்கிறார். அப்படிப்பட்ட ஒரு நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்று அன்றைக்கு புரட்சியாளர் அம்பேத்கர் தமது கவலையை பதிவு செய்திருக்கிறார்.அந்த நிலையை உருவாக்கக்கூடிய வகையில் இன்றைக்கு செயல்பட்டு வருவது இந்திய ஒன்றிய அரசு தான் என்று நான் குற்றம் சாட்ட விரும்புகிறேன்சமூகநீதி காவலராக தமது வாழ்வை ஒப்படைத்துக் கொண்ட விபி சிங் அவர்களுக்கும் தந்தை பெரியார் அவர்களுக்கும் கான்சிராம் அவர்களுக்கும் பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்தார்.

அதெப்படி பாரத ரத்னா விருது கோரலாம்?: திருமாவளவனின் இந்த கோரிக்கைக்கு தீவிர பெரியாரிஸ்டுகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. “ 'பாரதத்தை' காறித்துப்பிய ஆரியம் அண்டா நெருப்பு பெரியார்! திருமாவே!அவருக்கு 'பரதரத்னா' விருதுகோரல் கொள்கைப்படி தவறு. சாம்பலாகிடும்!” என்கிறார் திமுக நிர்வாகியான பெரியாரிஸ்ட் தடா ஓ.சுந்தரம். பாரத ரத்னாவா எங்கள் அய்யாவுக்கா?. வேண்டவே வேண்டாம் என்கிறார் திராவிடர் விடுதலைக் கழக நிர்வாகி அன்பு தனசேகரன்.
தந்தை பெரியார், விபி சிங்.. பாரத ரத்னா விருது அறிவிக்கனும்.. லோக்சபாவை அதிர வைத்த திருமாவளவன்!
திருமாவுக்கு நன்றி: ஜாதியும், ஆணாதிக்கமும் - இவற்றுக்குக் காரணமான இந்து மதமும் இயங்குகின்ற எல்லா நாட்டிற்கும் உரியவர், தேவைப் படுபவர் பெரியார். அவருக்கு "பாரத் ரத்னா" விருது வேண்டும் என முழங்கிய விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர், திருமாவளவன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி! பெரியாரின் இலக்கு ஜாதி ஒழிப்பு, பெண்விடுதலை, பொதுவுடைமை. இந்த இலக்குகளுக்குரிய கருவிகள், வழிகளில் ஒன்று தான் தனி நாடு. எல்லா காலங்களிலும் கருவிகளை அடிப்படையாக வைத்து மட்டுமே முடிவெடுக்க வேண்டாம். கொஞ்சமாவது, பெரியாரின் இலக்குகளை அடிப்படையாக வைத்து முடிவெடுப்போம் என்கிறார் பெரியாரிஸ்டான அதி அசுரன்.


பெரியாருக்கு பாரத ரத்னா தப்பே இல்லையே: அதே நேரத்தில் “பாரதத்தை பெரியார் ஏற்கவில்லை அதனால் அவருக்கு பாரத்ரத்னா கூடாது என்று பெரியார் பற்றாளர்களே சொல்கிறார்கள். (2014ஆம் ஆண்டு கலைஞர் அந்த கோரிக்கை வைத்தபோது எனது கருத்தும் அதுதான்). ஆனால் பெரியார் நூற்றாண்டின்போது, இந்திய ஒன்றிய அரசு அவருக்கு அஞ்சல் தலை வெளியிட்டதை ஏன் தமிழர்கள் நாம் கொண்டாடினோம்? அஞ்சல் தலை என்பது கொஞ்சம் சிறிய அளவிலான அங்கீகாரம், பாரத் ரத்னா என்பது கொஞ்சம் பெரிய அளவிலான அங்கீகாரம். பாபாசாகேப் அம்பேத்கருக்கு அந்த விருதை வழங்கியவர் வி.பி.சிங். அதே வி.பி.சிங்தான் பாரதத்தை சேராத நெல்சன் மன்டேலாவிற்கும் வழங்கினார். அந்தபடி பார்த்தால் பாரதத்தை சேராத பெரியாருக்கும் அதை வழங்கலாம் தப்பில்லை. சரி பெரியாருக்கு பாரத் ரத்னா வழங்கப்படுமா? மோடியின் இந்தியாவில் அதற்கு வாய்ப்பில்லை. ஆனால் இப்போதிருந்து அந்த கோரிக்கையை முன்வைத்தால், பெரியாரின் 150ஆவது ஆண்டான 2029இல் வாய்ப்பிருக்கிறது. என்னைப் பொறுத்தவரை, பெரியாருக்கு பாரத் ரத்னா வழங்கவேண்டும் என்கிற கோரிக்கை நியாயமானது, பெரியாருக்காக அல்ல பாரதத்திற்காக, பாரத தேசமெங்கும் இருக்கும் சூத்திரர்களுக்கும் பஞ்சமர்களுக்கும் பெரியாரை கொண்டுசெல்வதற்காக” என்கிறார் திராவிடர் இயக்க ஆதரவாளர் பிரபாகரன் அழகர்சாமி. சமூக வலைதளங்களில் தற்போது பெரியாருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமா? இல்லையா? என்கிற விவாதம் அனல் பறக்கிறது.












Click it and Unblock the Notifications