வடிவேலுண்ணே...வேணாண்ணே.. சூதானமா இருண்ணே...மதுரை தம்பியின் மனந்திறந்த கடிதம்!
அன்புள்ள பெரிசு வடிவேலுக்கு,
நம்ம மதுரைக்கார பயதான் எழுதறேன்ணே. எப்படிண்ணே இருக்கீங்க? வீட்டுல மதினி புள்ளைக எல்லாம் சவுக்கியந்தானே?
ரொம்ப சந்தோசமா இருக்குதுண்ணே. அதான்ணே மறுபடியும் களத்துக்கு வந்துட்டீங்கற சேதியைத்தான்..
ரெட் கார்டு போட்டு உங்க ஜோலியை முடிக்கலாம்னு நினைச்சாங்க சில பேரு.. விட்டுருவோமாண்ணே உங்களை.. மீம்ஸ் மேல மீம்ஸ் போட்டு அத்தனை மாம்ஸ்களோட கதையை முடிச்சோம்ல..
நீங்க அடிக்கடி சொல்லுவீக, உங்களை ரசிகர்கள் குடும்பத்தில் ஒருத்தரா பார்க்கிறாங்க.. அது நெசம்தான்.. ஒவ்வொரு ரசிகருமே உங்களை பொறந்தவனாத்தான் பார்க்கிறாங்கப்பு.
இடையிலேயே கொஞ்ச நாள் சேருவாரோட சேர்ந்து ஏதேதோ செஞ்சீட்டிங்கதான்.. அந்த சேட்டை கூட செய்யலைன்னா நாமெல்லாம் ஏன் மதுரைக்காரனுகன்னு சொல்லனும்.. ஆனால் பெருசு, நீங்க அதுக்கு கொடுத்த விலை கொஞ்சம் ஜாஸ்திதான்.
நீங்கபாட்டுக்கு அங்கிட்டு இங்கிட்டு அலைஞ்சு திரிஞ்சு மைக் பிடிச்சுட்டு பேசிட்டீக.. உங்களை பார்க்காம இந்த சினிமா மேலேயே எனக்கு செம காண்டாகிடுச்சு தெரியுமா.. அப்பப்ப நீங்க சேட்டை செய்யுறதாக வர்ற நியூஸ் எல்லாம் என்னடா இந்த மனுசன் அடங்கமாட்டேங்கிறாரேன்னு முசுமுசுன்னு கோபம் கூட வரும்.
சரி அதை தூக்கி அங்கிட்டு வீசு தலைவா! எல்லாம் முடிஞ்சிருச்சு.. உங்களோட அடுத்த இன்னிங்ஸ் வந்துடுச்சு.. இனியாச்சும் யார் வம்பு தும்புக்கும் போகாதீங்க.. செவனேன்னு நாம உண்டு நம்ம வேலை உண்டுன்னு கட்டையை போட்டுகிட்டு போய்க்கிட்டே இருப்போம்..
ஏன்னா ஊரு உலகத்தோட நெலமை அப்படி கெட்டுக் கிடக்கு.... நாம ஒன்னு சொன்னா... சொல்லாததையும் சேர்த்து கோர்த்து விடுற பயலுகதான் இங்க சுத்தி இருக்காய்ங்க.. அதுவும் சினிமாவை பத்தி நான் சொல்லித்தான் தெரியனும்னு இல்ல.. ஏன்னா வாங்கின அடி அப்படி... ஊமகுத்தாவே குத்தியிருக்கானுக நம்மளை!
இனிமே ஸ்ட்ரெயிட்டா போறோம்.. பஸ்ஸை பிடிக்கிறோம்.. கமுக்கமா உட்கார்ந்துட்டு கம்முனு அங்கிட்டு இறங்கிட்டுப் போய்ட்டே இருக்கிறோம்.. அப்படிங்ற மாதிரி சூட்டிங் போகனும்... நடிச்சு கொடுக்கனும்.. கம்முனு வீட்டுக்கு வந்து தூங்கிடனும்.. கனவுல கூட அப்ப மாதிரி ஆசையெல்லாம் வச்சுக்கப்படாது!
நீங்க அதுக்கு சரிப்பட்டு வரமாட்டீங்க..
சினிமாவுலதான் நீங்க எதுக்கு சரிப்பட்டு வரமாட்டீங்கன்னுக்கு சொல்லாமலேயே விட்டாங்க..
ஆனால் நிஜத்துல சொல்றோமப்பு..
நமக்கு அந்த அரசியல் ஆசையெல்லாம் வேணாஞ்சாமீ.. மூட்டையை கட்டி பரண்ல எறிஞ்சுட்டு ஆகுற வேலையை பாருங்க..
அதுதான் நம்ம ஊருக்குப் பெருமைண்ணே.. சூதானமாக நடந்துக்குங்கப்பு!
அன்புடன்
உன் பொறந்தவன்