சென்னையில் ரூ.20 கோடி வைரம் கொள்ளை.. நகை விற்க சென்றவரை கட்டிப்போட்டு கைவரிசை காட்டிய கும்பல்
சென்னை: சென்னை வடபழனி நட்சத்திர ஹோட்டலில் வைர நகையை விற்பனை செய்ய சென்ற நபரை அறையில் கட்டிப்போட்ட அவரிடம் இருந்த ரூ.20 கோடி மதிப்பிலான வைர நகைகளை 4 பேர் கும்பல் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் வைர நகைகள் வைத்திருந்தார். இந்த நகைகளை விற்பனை செய்ய முடிவு செய்தார். இதற்காக அவர் இடைத்தரகர் ஆரோக்கியராஜ் என்பவரை அணுகி உள்ளார்.

ஆரோக்கியராஜ் வைர நகைகளை விற்பனை செய்து தருவதாக உறுதியளித்துள்ளார். 2 நாட்களுக்கு முன்பு ராகுல் என்பவரை அழைத்து கொண்டு ஆரோக்கியராஜ் அண்ணா நகரில் உள்ள சந்திரசேகர் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அப்போது வைர நகை மற்றும் அதற்கான விலை குறித்து விவாதித்துள்ளனர். அதன்பிறகு ஆரோக்கியராஜ் மற்றும் ராகுல் ஆகியோர் வீட்டை விட்டு சென்றனர். இந்நிலையில் தான் சந்திரசேகருக்கு போன் செய்த நபர்கள் வடபழனியில் உள்ள நட்சத்திர ஹோட்டலின் பெயரை கூறி வைர நகையுடன் அறைக்கு வரும்படி கூறியுள்ளனர். இதையடுத்து சந்திரசேகர் வைர நகையை எடுத்து கொண்டு நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றுள்ளார்.
அப்போது 4 பேர் கும்பல் அவரை தாக்கி வைர நகையை பறித்துள்ளது. அதோடு அறையின் உள்ளே கை, கால்களை கட்டி போட்ட கும்பல் வைர நகையை எடுத்து கொண்டு எஸ்கேப் ஆனது. இதற்கிடையே தான் குறிப்பிட்ட அந்த அறை நீண்ட நேரம் திறக்கப்படாததால் ஹோட்டல் ஊழியர்கள் சந்தேகம் அடைந்தனர். அவர்கள் அந்த அறையை திறந்து பார்த்தனர்.
அப்போது கை, கால்கள் கட்டப்பட்டு சந்திரசேகர் கிடந்தார். அவரை ஹோட்டல் ஊழியர்கள் மீட்டனர். அதன்பிறகு நடந்த சம்பவம் தொடர்பாக சந்திரசேகர் சென்னை வடபழனி போலீசில் புகார் அளித்தார். அதில் கொள்ளையடிக்கப்பட்ட வைர நகையின் மதிப்பு ரூ.20 கோடி இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். ஹோட்டலில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து போலீசார் 4 பேர் கும்பலை தேடுவருகின்றனர். மேலும் நகையை விற்பனை செய்ய உதவுவதாக கூறிய இடைத்தரகர் ஆரோக்கியராஜ் மற்றும் ராகுல் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications