ஒரு பிரியாணிக்கு போரா? கொஞ்சம் கேட்ட மனைவி.. தீவைத்து எரித்த கணவன்! இப்போ கணவனும் பலி! என்னாச்சு?
சென்னை : சென்னையில் தனியாக பிரியாணி வாங்கி வந்து சாப்பிட்ட கணவனிடம் தனக்கும் கொஞ்சம் தருமாறு கேட்ட மனைவி எரித்து கொலை செய்யப்பட்ட நிலையில், மனைவி கட்டிப்பிடித்ததால் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த கணவனும் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பிரியாணி எல்லோருக்கும் பிடித்தமான உணவு வகை என்பது உண்மைதான் பிரியாணியால் சில நேரங்களில் பிரச்சனைகளும் ஏற்பட்டிருக்கிறது. காதணி விழா போன்ற விருந்துகளில் அப்படி நடப்பது சகஜம்.
ஆனால் பிரியாணி காரணமாக ஒரு குடும்பமே உயிரிழந்திருப்பதை உங்களால் நம்ப முடிகிறதா?. நம்பித்தான் ஆக வேண்டும் சென்னையில் தான் அப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கணவன் - மனைவி
தனியாக பிரியாணி வந்து சாப்பிட்ட கணவனிடம் தனக்கும் கொஞ்சம் தருமாறு கேட்ட மனைவி எரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் அவர் கட்டிப்பிடித்ததால் தீக்காயம் அடைந்த கணவனும் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்திருக்கிறார். சென்னை அயனாவரம் தாகூர் நகர் மூன்றாவது தெரு பகுதியைச் சேர்ந்த கருணாகரன் ரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பத்மாவதி. இந்த தம்பதியினருக்கு குமார், மகேஸ்வரி, கார்த்திக், ஷகிலா என நான்கு பிள்ளைகள் இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி சென்னையின் பல பகுதிகளில் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

பிரியாணி
தனிமை காரணமாக மனநலம் பாதிக்கப்பட்ட கருணாகரன் - பத்மாவதி தம்பதி சில ஆண்டுகள் மருத்துவ சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. தற்போது மீண்டும் அயனாவரம் தாகூர் பகுதியில் தனியாக வசித்து வந்திருக்கின்றனர் இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு கருணாகரன் பிரியாணி சாப்பிட வேண்டும் என ஆசைப்பட்டு கடைவீதிக்கு சென்று இருக்கிறார். பின்னர் அங்கிருந்து பிரியாணி வாங்கி வந்து வீட்டில் சாப்பிட தொடங்கி இருக்கிறார். அப்போது அங்கு வந்த பத்மாவதி தனக்கும் பிரியாணி வேண்டும் என கேட்டுள்ளார்.

மனைவி மீது தீ
தர முடியாது என கருணாகரன் தானாகவே பிரியாணி சாப்பிட்ட நிலையில் இது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறிய நிலையில் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற கருணாகரன் மனைவி என்றும் பாராமல் பத்மாவதி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். இதை சற்றும் எதிர்பாராத பத்மாவதி தீயின் கொடுமை தாங்க முடியாமல் அலறியபடி வீட்டின் பல பகுதிகளில் ஓடியுள்ளார். மேலும் கருணாகரனையும் அவர் கட்டிப்பிடித்துள்ளார்.

கணவன் பலி
இதில் கருணாகரன் மீதும் தீ பற்றிய நிலையில் இருவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தோர் தீயை அணைத்து ஆம்புலன்ஸ் மூலம் கீழ்பாக்கம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது பத்மாவதி இடம் விசாரணை நடைபெற்ற நிலையில் கணவன் பிரியாணிக்காக தன் மீது தீ வைத்ததாக கூறினார். சிறிது நேரத்திலேயே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் 50 சதவீத காயங்களுடன் சிகிச்சை பெற்ற வந்த கருணாகரன் இன்று உயிரிழந்திருக்கிறார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications