முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலாக உதயநிதி.. தலைமைச் செயலகத்தில் நடந்த முக்கிய மீட்டிங்!
சென்னை: வழக்கமாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் முத்திரை திட்டங்களின் நிலை பற்றிய ஆய்வுக் கூட்டம் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றுள்ளது. துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் பரவி வரும் சூழலில் இது கவனம் பெற்றுள்ளது.
தமிழக அரசின் முக்கியமான முன்னெடுப்பு திட்டங்கள் 'முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள்' என்ற பெயரில் வகைப்படுத்தப்பட்டு அவ்வப்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே இது போன்ற கூட்டங்கள் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பல முறை நடைபெற்றுள்ள நிலையில் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறை, பள்ளிக்கல்வித்துறை, மின்சாரம், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சுகாதாரத்துறை, சமூக நலம் உள்ளிட்ட முக்கியமான 11 துறைகளின் கீழ்வரும் முக்கியமான திட்டங்கள் முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் என்ற அடிப்படையில், அவற்றின் முன்னேற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறார்.
இந்நிலையில், இன்று (செப்டம்பர் 19) சென்னை தலைமைச் செயலகத்தில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் முத்திரை திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அண்மையில் முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா சென்றிருந்த நிலையில், அவருக்குப் பதிலாக முக்கிய கூட்டங்களில் அமைச்சர் உதயநிதி பங்கேற்றிருந்தார்.
தற்போது முதல்வர் ஸ்டாலின் தமிழகம் திரும்பியுள்ள நிலையில், மீண்டும் துணை முதல்வர் நியமனம் தொடர்பான விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. விரைவில் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்பார் எனக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் தான் முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலாக முக்கியமான ஆய்வுக் கூட்டத்தில் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.
இந்தக் கூட்டத்தில், தலைமைச் செயலர் நா.முருகானந்தம் மற்றும் பல்வேறு துறைகளின் செயலர்கள், துறைத் தலைவர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில், மின்துறை உள்ளிட்ட ஒவ்வொரு துறைகள் சார்பிலும் செயல்படுத்தப்படும் முத்திரை திட்டங்கள் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டறிந்தார். அத்துடன், பல்வேறு அறிவுறுத்தல்களையும் வழங்கினார்.
இந்த ஆய்வுக்கூட்டம் தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், "முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல்படி, அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் முத்திரை திட்டங்களின் நிலை குறித்து தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஆய்வு செய்யப்பட்டது.
நெடுஞ்சாலைப் பணிகள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த கட்டுமானப் பணிகள், மக்கள் நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு முத்திரைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவது தொடர்பாக சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் ஆய்வுகளைச் செய்திருந்த நிலையில், அப்போது அளித்த ஆலோசனைகளின் படி முத்திரைத் திட்டங்களுக்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறதா என்பது குறித்து அதிகாரிகள், அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது.
மேலும், இந்த திட்டங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அவற்றை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவருவது குறித்த ஆலோசனைகளை இந்த கூட்டத்தில் வழங்கப்பட்டது" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications