அபராதம் போடுங்க.. தவறே இல்லை.. விதி மீறினால் கட்ட வேண்டியதுதான்.. ஆனால்.. சாமானியனின் குமுறல்!
Recommended Video
சென்னை: சாலையில் விதிமீறலுக்காக கடுமையான அபராதங்கள் விதிக்கும் அரசு அந்த சாலையை ஒழுங்காக போடாதவர்களுக்கும், ஒழுங்காக இருந்த சாலைகளை மோசமாக மாற்றியவர்களுக்கும் இதுவரை எத்தனை முறை அபராதம் விதித்துள்ளது என சாமானிய மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
போக்குவரத்து விதிமீறல்களுக்கு கடுமையான அபராதங்கள் விதிக்கும் சட்டம் தமிழகம் உள்பட நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த சட்டம் மக்களிடையே கடும் அதிருப்தியையும், ஆதங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவர்களிடம் பல கேள்விகள் உள்ளன. ஆனால் எதற்குமே எங்குமே பதில் இல்லை.
இதுகுறித்து சாமானியர் ஒருவர் குமுறலாக நமக்கு அனுப்பியது அப்படியே.. "சாலையில் விதிமீறலுக்காக கடுமையான அபராதங்கள் விதிக்கும் அரசு அந்த சாலையை ஒழுங்காக போடாதவர்களுக்கும், ஒழுங்காக இருந்த சாலைகளை மோசமாக மாற்றியவர்களுக்கும் இதுவரை எத்தனை முறை அபராதம் விதித்துள்ளது.

சாலையில் விதிமீறல்
சாலைகளில் செல்வோர் விதிகளை பின்பற்றி தான் செல்ல வேண்டும் என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை. ஆனால் சாலையில் செல்வதில் எழும் பிரச்சனைக்காகத்தானே அபராதம் விதித்துள்ளது. ஆனால் சாலையே பிரச்சனையாக இருக்கிறதே. அதற்காக யாரிடம் அபராதம் விதித்துள்ளது அரசு. எத்தனை சாலைகளில் பிளாட்பாரங்களை ஆக்கிரமித்துள்ளனர். நடக்கமுடியாத அளவுக்கு.. அவர்கள் மீது ஏன் நடவடிக்கை பாய்வதில்லை. பல இடங்களில் பிளாட்பாரமே இல்லாமல் சாலைகள் உள்ளன. அதற்கு என்ன தீர்வு.

தானியங்கி அபராதம்
மக்கள் ஹெல்மெட் அணியாமல் செல்வதால் விபத்தில் உயிரிழக்கிறார்கள். நிச்சயம் இதை ஏற்று அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும். மக்களின் உயிரை காக்க அபராதம் விதிப்பது சரியான செயலே. ஆனால் ஹெல்மெட் இல்லாமல் சாலையில் செல்லவே முடியாது என்ற நிலையை அரசால் எளிதாக உருவாக்க முடியும். அப்படி செய்வதில் அரசுக்கு என்ன பிரச்சனை. இன்று போலீஸ் இல்லை. அந்த பக்கம் இருக்கிறார் என போலீஸை பார்த்து பார்த்து எஸ்கேப் ஆகும் நபர்களை பிடிக்க கேமரா கண்காணிப்பு மூலம் தானியங்கி முறையில் அபராதத்தை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தலாமே.

நடைமுறைப்படுத்த அரசு தயாரா
குடிபோதையில் வாகனம் ஓட்டினால் 10 ஆயிரம் அபராதம் இப்போது விதிக்கிறார்கள். இது நிச்சயம் பாராட்டும் முடிவு தான். ஆனால் எங்கே தைரியமாக அனைத்து மதுக்கடை முன்பு நின்று குடித்துவிட்டு வாகனத்தை இயக்குவோரை போலீசார் வசமாக அந்த நொடியோ தினமும் பிடித்து அபராதம் விதிக்கலாமே. அப்படி செய்தால் குடித்துவிட்டு யாருமே வாகனத்தை எடுத்து ஓட்டிச்செல்லவே முடியாது. இதை உறுதியுடன் நடைமுறைப்படுத்த அரசு தயாரா.

கட்டாயமாக்கி அபராதம் சரியா
வாகனத்திற்கு இன்சூரன்ஸ் இல்லாமல் இயக்கினால் 2 ஆயிரம் அபராதம் விதிக்க அரசு முடிவு செய்துள்ளது. இன்சூரன்ஸ் என்பது நிச்சயம் அவசியம் தான். ஆனால் அதற்கு கடும் அபராதம் விதிக்கும் அளவுக்கு பெருங்குற்றமா என்பதை யோசிக்க வேண்டியது அவசியம். வாகனத்திற்கு இன்சூரன்ஸ் போடுங்கள் என விழிப்புணர்வு ஏற்படுத்தலாமே தவிர கட்டாயப்படுத்தி கடுமையாக தண்டிப்பது சரியா.. இந்தியாவில் 60 சதவீதத்திற்கு மேற்பட்ட வாகனங்களில் இன்சூரன்ஸ் இல்லை என்பது அரசுக்கு தெரியாதா..

மதுவும் முக்கிய பிரச்சனை
இங்கே சாலை விதிமீறலுக்கு அரசின் அபராதங்கள் சரியல்ல என்று நான் வாதிடவில்லை... ஆனால் விதிமீறல்களை கடுமையாக அமல்படுத்தும் அதேநேரம் விதிமீறலுக்கான சூழல்களையும் இல்லாமல் செய்ய வேண்டியது அரசின் கடமையும் கூட. தரமான சாலைகள்.. சாலைகளில் தோண்டுவோரே அதை புதுப்பித்து தரவேண்டும். சாலையை கண்காணிக்க குழு, சாலை சரியாக இல்லை என்றால் சாலை போட்டவருக்கே அபராதம் போன்றவற்றையும் அரசு செய்ய வேண்டும். இதேபோல் மதுவால் தான் விபத்துக்கள் பலவற்றுக்கு காரணம். எனவே மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை தடுக்க மதுக்கூடங்கள் அருகே நான்கு பக்கமும் சாலைகளில் தினமும் கடுமையாக சோதிக்கலாமே." இவ்வாறு அதில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications