சடன் எஸ்கேப்.. என்னாச்சு சிறார் கைதிகளுக்கு? மதமாற்றமா? கே.சந்துரு தலைமையில் ஆணையம் அமைத்த தமிழக அரசு
சென்னை: சிறார் கூர்நோக்கு இல்லங்களிலிருந்து சமீபத்தில் சில சிறுவர்கள் தப்பி சென்ற நிலையில், கூர்நோக்கு இல்லங்கள் திறம்பட இயங்குவதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைக்க முன்னாள் நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.
பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடும் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சிறைசாலைக்கு பதில் கூர் நோக்கு இல்லத்திற்கு மாற்றப்படுவது வழக்கம். இந்நிலையில், கடந்த சில நாட்களாக இந்த கூர்நோக்கு இல்லங்களில் உள்ள சிறார்கள் தப்பி செல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அதாவது, வேலூர் மாவட்டம் காகிதபட்டறை பகுதியில் இயங்கி வரும் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில், சென்னையில் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவர்கள் சிலர் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு தங்க வைக்கப்பட்டிருந்த சிறுவர்களில் ஒருவரை மார்ச் 25ம் தேதி சென்னை சிறார் இல்லத்திற்கு மாற்ற அதிகாரிகள் முயன்றனர். ஆனால் அதற்கு ஒத்துழைக்காத சிறுவர் பாதுகாப்பற்ற சுவர் மீது ஏறி அட்டகாசம் செய்துள்ளார். இதனையடுத்து செய்வதறியாமல் விழித்த அதிகாரிகள் இளுஞ்சிறார் நீதிமன்ற குழும நீதிபதி பத்மகுமாரிக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அவர் சம்பந்தப்பட்ட சிறுவனிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இதனையடுத்து 2 மணி நேரத்திற்கு பிறகு சிறுவன் கீழிறங்க சம்மதித்தார். பின்னர் பிரச்னை முடிவுக்கு வந்தது.
ஆனால், இந்த சம்பவம் நடந்து இரண்டு நாட்களுக்கெல்லாம் அதாவது மார்ச் 27ம் தேதி, சம்பந்தப்பட்ட சிறுவன் உட்பட 6 சிறார்கள், பாதுகாவலர் மற்றும் ஊழியர்களை தாக்கிவிட்டு கூர்நோக்கு இல்லத்தைவிட்டு தப்பி சென்றுள்ளனர். இதனையடுத்து சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த வேலூர் சரக டிஐஜி முத்துசாமி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.
இதனையடுத்து தப்பி சென்ற சிறுவர்கள் குறித்து திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்ட காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பமவ் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், காஞ்சிபுரத்திலும் இதேபோன்று மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது, காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் பகுதியில் அன்னை சத்யா எனும் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் 29 சிறுமிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 6ம் தேதி அனைவரும் சாப்பிட்டுவிட்டு உறங்க சென்ற நிலையில் சில சிறுமிகள் மட்டும் பாதுகாவலரின் ரூம் கதவை வெளியில் தாழிட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர். இதனையடுத்து சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் நடத்திய விசாரணையில் மொத்தம் 6 சிறுமிகள் தப்பியோடியுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சிறுமிகளை மீட்க தனிப்படை அமைக்கப்பட்டது. இதில் 4 சிறுமிகள் மீட்கப்பட்ட நிலையில் மீதமுள்ளவர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தில், சிறுமிகள் தப்பி செல்லும் அளவுக்கு அஜாக்கிரதையாக இருந்ததாக கூர்நோக்கு இல்லத்தின் பாதுகாவலர் மற்றும் அவரின் உதவியாளர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல, இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அரசினர் கூர்நோக்கு இல்லத்தின் ஆணையர் ஆர்.ஜி.ஆனந்த், "கூர்நோக்கு இல்லத்திலிருந்து சிறார்கள் தப்பி சென்ற சம்பவம் குறித்து தேசிய குழந்தைகள் நல ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ளது.
அரசினர் பாதுகாப்பு இல்லங்களிலிருந்து சிறார்கள் தப்பி செல்வதை தடுக்க அரசு தனி கவனம் செலுத்த வேண்டும். அதேபோல கூர் நோக்கு இல்லங்களில் பாலியல் வன்கொடுமைகள், மதமாற்றம் போன்றவை நடைபெறுகிறதா? என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்" என்று கூறியிருந்தார். இதனையடுத்து கூர்நோக்கு இல்லங்கள் திறம்பட இயங்குவதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைக்க முன்னாள் நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.












Click it and Unblock the Notifications