பிரதமர் மோடிக்கு எதிராக 'வாயாலே வடை சுடும்' போராட்டம்! பொள்ளாச்சி திமுகவினர் நூதனப் பரப்புரை!
சென்னை: பிரதமர் மோடிக்கு எதிராக 'வாயாலே வடை சுடும்' நூதனப் போராட்டத்தை கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடத்தி திமுகவினர் கவனம் ஈர்த்துள்ளனர்.
மத்திய நிதி தொகுப்புக்கு தமிழ்நாடு வழங்குகிற 1 ரூபாயில் திரும்பப் பெறுவது 29 பைசா தான். ஆனால், உத்தரப்பிரதேச மாநிலம் பெறுவதோ ரூபாய் 2.73. இதனால் கடந்த 10 ஆண்டு காலமாக மத்திய நிதி பகிர்வில் தொடர்ந்து தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் வஞ்சிக்கப்படுவதாக புகார் தொடர்கிறது.

அதே போல் கடந்த 2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த போது கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் கடந்த ஒன்பதரை ஆண்டு காலமாக ஏமாற்றி விட்டதாக திமுக தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. 70 கோடி மக்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்குகிற பிரதம மந்திரி அன்னயோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசி தரமற்று இருப்பதாக திமுக சாடி வருகிறது.
அதே போல் வங்கிக்கணக்கில் 15 லட்சம் வழங்கும் விவகாரம், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை, பெட்ரோல் டீசல் விலை குறைக்காதது, வெள்ள நிவாரண நிதி என பல விவகாரங்களில் பிரதமர் மோடி வாயால் மட்டுமே வடை சுடுவதாக விமர்சித்த பொள்ளாச்சி திமுக நிர்வாகிகள், புதிய பேருந்து நிலையம் வாசலில் பொதுமக்களுக்கு வடை வழங்கி நூதனப் பரப்புரையில் ஈடுபட்டனர். இதே போல் மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு எந்த திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டிய திமுகவினர் சென்னையில் அல்வா கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல் 29 பைசா என்பதை பெரிய பேனரில் அச்சடித்து பாஜகவை எதிராக திமுகவினர் பரப்புரை செய்தனர். அதன் தொடர்ச்சியாக தான் இப்போது பொள்ளாச்சியில் திமுக நகரச் செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் பிரதமர் மோடிக்கு எதிராக வாயால் வடை சுடும் போராட்டம் நடத்தியுள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை இப்படியொரு போராட்டம் நடைபெற்றதில்லை என்பது கவனிக்கத்தக்கது.
சி.பி.ஐ, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை போன்ற விசாரணை அமைப்புகளுடன் பாஜக கூட்டணி வைத்துக்கொண்டு எதிர்க்கட்சியினரை மிரட்டுவதாக திமுக குற்றஞ்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications