அம்பேத்கரை பிடிக்காத சின்ன கூட்டம்! வெளுத்துக் கட்டிய கமல்! ட்ரோல் ஆகும் விஜய்
சென்னை: அம்பேத்கர் பற்றிய விஜய் பேச்சில் தெளிவான புரிதல் இல்லை என்பதைச் சுட்டிக்காட்ட கமல்ஹாசனின் பேச்சை ஒப்பிட்டு எக்ஸ் தளத்தில் பலர் விவாதம் செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டு அரசியல் களத்தில் அம்பேத்கர் விவாதப் பொருளாக மாறி இருக்கிறார். டிசம்பர் 6 ஆம் தேதி வெளியிடப்பட்ட 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழா, கிட்டத்தட்ட திமுக ஆட்சி மீதான கண்டனப் பொதுக்கூட்டம் போலவே நடைபெற்றது. அதில், விஜய்கூட அம்பேத்கர் புத்தகத்தைப் பற்றிப் பேசியது கொஞ்சம்தான். வெளியிடப்பட்ட நூலில் இடம்பெற்றிருந்த 'விசாவுக்காக காத்திருக்கிறேன்’ என்ற அம்பேத்கரின் சுயசரிதை கட்டுரையை மட்டும் சுட்டிக்காட்டிப் பேசினார்.

அவரது பேச்சில் அம்பேத்கர் பற்றிய தெளிவான புரிதல் இல்லை என்பது விசிக மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகளின் கருத்தாக வெளிப்பட்டது. அம்பேத்கர் பெருமையைக் கொண்டாட வேண்டிய மேடையில், திருமாவளவன் வராமல் தவிர்த்தது பற்றியே விஜய் ஹைலைட் ஆக குறிப்பிட்டுப் பேசி இருந்தார். என்னதான் வழக்கம் போல் விஜய் அம்பேத்கர் பற்றி ஒரு குட்டிக் கதையை அவரது பாணியில் கூறியிருந்தாலும் அவர் இறுதியாக '2026 திமுக கூட்டணி கணக்குகள் உடைக்கப்படும்’ என்று பேசியது பல சந்தேகங்களைக் கிளப்பி இருந்தது.
தமிழில் அம்பேத்கர் குறித்துப் பல முக்கியமான புத்தகங்கள் வெளியாகி இருக்கின்றன. அதில் பெரியாரிய சிந்தனையாளர் வே. ஆனைமுத்து முயற்சியில் தனஞ்செய் கீர் எழுதிய 'டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு’ புத்தகம் இன்றுவரை சிறந்ததாகப் பலரால் கொண்டாடப்பட்டு வருகிறது. 1990களில் அம்பேத்கர் நூற்றாண்டு கொண்டாடப்பட்ட போதே தமிழ்நாட்டில் அம்பேத்கர் பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்கத் தொடங்கி விட்டது. அந்தக் கால கட்டத்தில் மராட்டிய மாநில அரசு அம்பேத்கர் படைப்புகளைத் தொகுத்து வெளியிட்ட பெரிய தொகுதிகளாக வெளியிடப்பட்டன. அவை தமிழிலும் வெளியாகி இருக்கின்றன.
அம்பேத்கரைப் பல அரசியல்கட்சிகள் இதே காலகட்டத்தில் கையில் எடுத்தன. பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட போது அம்பேத்கர் அரசியலைக் குறிக்கும் விதமாக மருத்துவர் ராமதாஸ் கட்சிக் கொடியில் நீல வண்ணத்தை முதலில் இருக்கும்படி அமைத்தார். தமிழ்நாட்டில் அம்பேத்கர் சிலையை அதிகம் நிறுவிய கட்சி தாங்கள்தான் என ராமதாஸ் தொடர்ந்து பேசியும் வருகிறார். இதே காலகட்டத்தில் பாமகவுடன் தொடர்ந்து அரசியல் ரீதியாக இணைந்து விசிக.
அம்பேத்கரை மற்ற எந்தக் கட்சிகளைவிடவும் அதிக அளவில் தமிழ்நாட்டில் திருமாவளவன் முன்வைத்து பல ஆயிரக்கணக்கான கூட்டங்களில் உரையாற்றி இருக்கிறார். ஆதவ் அர்ஜுனா அரசியல் களத்திற்கு வருவதற்கு முன்பே அம்பேத்கரை ஒரு ஐகான் ஆக தூக்கிப் பிடித்தவர் திருமாவளவன். ஒரு காலகட்டத்தில் அம்பேத்கரை உயர்த்தி பிடிப்பதற்காகப் பெரியார் மீதும் அவரது கொள்கை மீதும் மிகக்கடுமையான விமர்சனங்களை முன்வைத்தவர் விசிகவின் அரசியல் எழுச்சியின் பின்புலமாக இருந்த எழுத்தாளர் ரவிக்குமார்.
ஆக, அம்பேத்கர் பற்றிய நிறைய கட்டுரைகளை அவர் எழுதினார். அவர் நடத்திய 'தலித்’ பத்திரிக்கையில் அம்பேத்கர் அரசியல்தான் அடிப்படையாக இருந்திருக்கிறது. விசிக துணைப் பொதுச் செயலாளர் கெளதம சன்னா இப்போது அம்பேத்கர் படைப்புகளைப் பல தொகுதிகளாக தொகுத்து முடித்திருக்கிறார். அந்தப் புத்தகங்கள் சில மாதங்கள் முன்பாகவே தயாராகிவிட்டன.
இந்நிலையில்தான் அம்பேத்கர் பற்றிய விஜய் பேச்சுக்கும் அதற்கு முன்பே பிக்பாஸ் நிகழ்ச்சியில் அம்பேத்கர் பற்றிய கமல்ஹாசன் பேச்சுக்கும் இடையில் எந்தளவு முதிர்ச்சியான வேறுபாடுகள் இருக்கின்றன என்பதைப் பற்றி பலரும் எக்ஸ் தளத்தில் சுட்டிக்காட்டிப் பேசி வருகின்றனர்.
கடந்த பிக்பாஸ் சீசனில் கமல்ஹாசன் 'அம்பேத்கர் அன்றும் என்றும்’’ என்ற நூலைப் பற்றி சுட்டிக்காட்டிப் பேசி இருந்தார். அப்போது அவர், “ வழக்கமாகப் புத்தகத்தின் பெயரை மட்டும் சொல்லிவிட்டுப் போய்விடுவீர்கள். ஆனால், இந்தப் புத்தகத்தை மட்டும் கையிலேயே எடுத்துக் காட்டுகிறீர்கள் என்று சிலர் நினைக்கலாம். இந்தப் புத்தகம் மிக முக்கியமானது. ஒரே மூச்சில் படிக்கக் கூடியது அல்ல. இந்தப் புத்தகம் பலருக்குப்பிடிக்கும். சிலருக்குப் பிடிக்காது. சிலருக்குப் பிடிக்கவே பிடிக்காது. அதைப் பற்றி பரவாயில்லை. ரொம்ப சின்ன கூட்டத்திற்குத்தான் பிடிக்காது.
இந்தப் புத்தகத்தில் அம்பேத்கர் என்ன சொல்லி இருக்கிறார்? மனிதன் ஒருவரை வருவர் சுரண்டுவதற்கு என்னென்னவோ யுக்திகளைக் கண்டுபிடித்திருக்கிறான். கத்தி, துப்பாக்கி என இவை எல்லாம் ஆதிக்கம் செலுத்துவதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டவைதான். அதில் என்ன பிரயோஜனம் இருக்கிறது? அதை வைத்து வெங்காயம் வெட்டமுடியுமா? ஆளை வெட்ட முடியுமா என்றுதான் மனிதன் யோசிப்பான். ஒரு ஆயுதம் சுரண்டலுக்காகவே கண்டுபிடிக்கப்பட்டதுதான் ஜாதி.
காதல் என்பதை ஒரு கூட்டம் வெறுக்கிறது. அதையே ஏன் அனைவரும் நம்பவேண்டும் என்று சொல்கிறார்கள் என்றால், அது வந்துவிட்டால் ஏற்றத் தாழ்வுகள் அடிபட்டுப் போய்விடும். ஏற்றத் தாழ்வுகள் அடிபட்டுப் போனால், ஊரை நான்காகப் பிரிக்க முடியாது. 4 ஆகப் பிரித்தால் 5ஆவது எது என்று சொல்ல முடியாது. எல்லாம் ஒன்றாகக் கலந்துவிடும். அதைப் புரிந்து கொள்ள இந்த அம்பேத்கர் புத்தகத்தைப் படியுங்கள். ஆதலினால் காதல் செய்வீர்” என்று பேசி இருந்தார்.
கமல்ஹாசனின் இந்தப் பேச்சை ஒப்பிட்டு விஜய்க்கு அம்பேத்கர் பற்றிய புரிதல் இல்லை என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதர பிரகாஷ் உட்படப் பலர் எக்ஸ் தளத்தில் விவாதித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications