பழைய ஓய்வூதியம்.. அரசு ஊழியர்களுக்கு நவம்பரில் தெரிய போகும் சூப்பர் விஷயம்.. சர்ப்ரைஸ் வெயிட்டிங்
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பல அரசு ஊழியர்களின் பெருங்கனவு என்றால் அது பழைய ஓய்வூதியம் திட்டம் தான்..ஆனால் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கு வாய்ப்பே இல்லை என்கிற பதிலையே பல ஆண்டுகளாக அரசு கூறி வருகிறது. ஆனாலும்
பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், ஓய்வூதிய முறை குறித்து பரிந்துரை வழங்க அதிகாரிகள் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த குழு வரும் நவம்பர் மாதம் அறிக்கை சமர்பிக்கும் என்பதால் அப்போது தான் நல்ல விஷயம் தெரியும்.

கடந்த 2003-ம் ஆண்டு மத்திய அரசு தனது ஊழியர்களுக்கான பங்களிப்பு இல்லாத பழைய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, 2004 ஜன. 1-ம் தேதிமுதல் புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தியது. இதை பின்பற்றி தமிழக அரசும் பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மத்திய அரசு பாணியில் புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியது. இந்த திட்டம் தான் தற்போது தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கிறது.
ஆனால் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை கடந்த ஆண்டு அமல்படுத்தியது. இந்த திட்டம் மூலம் மத்திய அரசு ஊழியர் ஒருவர், ஓய்வு பெறுவதற்கு முன் 12 மாதங்களில் எடுக்கப்பட்ட சராசரி அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக பெறுவார். முழு ஓய்வூதியத் தொகையை பெறுவதற்கான தகுதியாக பணி காலம் 25 ஆண்டுகளாகும். 25 ஆண்டுகளுக்கு குறைவாக அரசுப் பணியில் இருந்து 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு ஓய்வூதியத் தொகை விகிதாச்சார அடிப்படையில் கணக்கிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
தற்போதைய ஓய்வூதிய திட்டத்தில் ஊழியர்களின் பங்களிப்பு 10 சதவீதமும், மத்திய அரசின் பங்களிப்பு 14 சதவீதமும் உள்ளது. புதிய ஓய்வூதிய திட்டத்தின் படி மத்திய அரசின் பங்களிப்பு 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் எப்படி என்றால், ஒருவர் 25 வருடம் வேலை பார்த்து 80 ஆயிரம் சம்பளம் கடைசியாக வாங்கினால், அவருக்கு 40000 ஓய்வூதியம் கிடைக்கும். இதுதான் அடிப்படையாகும். ஆனால் 2003ம் ஆண்டில் இருந்த பழைய ஓய்வூதியம் அப்படி இல்லை..
பழைய ஓய்வூதிய திட்டத்தில் 10 ஆண்டுகள் சேவை புரிந்தாலே அவருடைய கடைசி மாத அடிப்படை ஊதியத்தில் 50சதவீதம் ஓய்வூதியமாக கிடைக்கும். இதுதான் அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை விரும்ப காரணமாக உள்ளது. இதனிடையே அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள். திமுக அரசும் பழைய ஓய்வூதிய திட்டம் பற்றி பரிசீலிக்க குழு அமைக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இதன்படியே குழு அமைத்துள்ளது தமிழக அரசு,
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், "கடந்த 1.4.2003 முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதே வேளையில் மத்திய அரசுப் பணியாளர்களுக்கு தேசிய ஓய்வூதியத் திட்டம் 1.1.2004 முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் மாநில அரசுப் பணியாளர்களுக்கு தொடர்ந்து பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமே தொடர அனுமதிக்கப்பட்டது. எனினும் மாநில அரசுப் பணியாளர்கள் 1.4.2003-க்கு முன்பிருந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டி தொடர்ந்து கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த மாதம் 24-ந்தேதி மத்தியப் பணியாளர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எனவே பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திட ஒரு குழு அமைத்திட அரசு முடிவு செய்துள்ளது.
மாநில அரசின் நிதி நிலையினையும், பணியாளர்களின் ஓய்வூதியக் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு நடைமுறைப்படுத்தத் தக்க உரிய ஓய்வூதிய முறை குறித்து பரிந்துரையினை அரசிற்கு அளித்திட அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி அந்த குழுவில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை கூடுதல் தலைமை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் முன்னாள் இயக்குனர் கே.ஆர்.சண்முகம், நிதித்துறை துணை செயலாளர் பிரத்திக் தாயள் ஆகியோர் அங்கம் வகிக்கிறார்கள்.
இக்குழு தனது விரிவான அறிக்கை மற்றும் பரிந்துரையை 9 மாதங்களுக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த அறிவிப்பை பார்க்கும் போது பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்களை ஆய்வு செய்து சட்டசபை தேர்தல் நெருங்கும் சமயத்தில் முக்கிய அறிவிப்பு வெளியிட வாய்ப்பு உள்ளது.ஏனெனில் அரசு அமைத்துள்ள குழு வரும் நவம்பர் மாதம் தான் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கும் என தெரிகிறது.
அதன்பிறகு அரசு அந்த அறிக்கையை ஏற்றுக்கொண்டு திட்டத்தை அறிவிக்கும் என்பதால் 2026 பிறக்கும் போது அரசு ஊழியர்களுக்கு கொண்டாட்டமாக இருக்க வாய்ப்பு உள்ளது. அதேநேரம் முழுமையாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த அதிக நிதி வேண்டும் என்பதால், சில மாற்றங்களுடன் கொண்டுவரவும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. தெளிவான முடிவு தெரிய இந்த ஆண்டு இறுதி வரை காத்திருக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications