கொட்டுன புளியோதரையை புதைக்க கூட இல்லையே.."சசிகலா"வின் "பொதுச் செயலாளர்" பதவி வழக்கு-திகிலில் அதிமுக!
சென்னை: அதிமுகவின் ஒற்றை தலைமை- அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்ற கெத்துடன் மதுரை மாநாடு முடிந்துள்ளது. ஆனால் இம்மாநாட்டில் டன் டன்னாக வீணாக்கி கொட்டப்பட்ட புளியோதரையை ஆழக் குழிதோண்டி புதைப்பதற்குள்ளாகவே சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவி வழக்கு அதிமுகவினரை திகிலடைய வைத்துள்ளது.
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே சென்னை உயர்நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரையிலான பல வழக்குகள் நடைபெற்று அத்தனையும் முடிவடைந்துவிட்டன. இந்த வழக்கு விவகாரங்களில் மாறி மாறி வெற்றி தோல்வி இருதரப்புக்கும் கிடைத்த போதும் இறுதியாக பொதுச்செயலாளர் பட்டத்தை வென்றது என்னவோ எடப்பாடி பழனிசாமிதான்.

மதுரை மாநாடு: இதனாலேயே மதுரையில் மிக பிரம்மாண்ட மாநாட்டை கூட்டி தமது தலைமையின் கீழ்தான் அதிமுக எனும் கட்சி ஒட்டுமொத்தமாக இருக்கிறது என நிரூபித்தார் எடப்பாடி பழனிசாமி. இம்மாநாடு முழுமையாக "கெத்து" காண்பிக்க நடத்தப்பட்டதே தவிர "ஆக்கப்பூர்வமான" விவகாரங்கள் எதுவும் பேசு பொருளாகவில்லை. அதிமுகவினருக்கு "உற்சாக டானிக்" என்ற வகையில் பெருமிதப்பட்டுக் கொள்ளக் கூடியதுதான் மதுரை மாநாடு.
மதுரை மாநாடு சர்ச்சை: இம்மாநாட்டில் அண்டா அண்டாவாக புளியோதரை சாதம் வீணடிக்கப்பட்டு மலைபோல் குவிக்கப்பட்டது பெரும் சர்ச்சையானது. இதனால் மதுரை விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்தே முடங்கும் என்கிற அளவில் செய்திகள் பேசப்பட்டன. இந்த புளியோதரையை ஆழக் குழி தோண்டி அதிமுகவினர் புதைத்து கொண்டிருந்தனர்.
சசிகலா அப்பீல்: அப்போதுதான் அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்கு உரிமை சசிகலா தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது ஆகஸ்ட் 30-ந் தேதி விசாரணை நடைபெறப் போகிறது என்கிற தகவல் வந்து சேர்ந்தது. இதுதான் அதிமுகவினரை திகிலடைய வைத்திருக்கிறது. அதிமுகவினரைப் பொறுத்தவரை மறந்தே போய்விட்ட ஒரு வழக்கு இதுதான். இப்போது இந்த வழக்கு உயிர்பெற்றிருப்பதுதான் அதிமுகவினரின் அதிர்ச்சிக்கு காரணம்.
பொதுச்செயலரான சசிகலா: 2016-ம் ஆண்டு அதிமுக பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலமானார். அப்போது ஓ.பன்னீர்செல்வம் இடைக்கால முதல்வராக்கப்பட்டார். அத்துடன் அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அப்போது ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இணைந்தே சசிகலாவை அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்வு செய்தனர்.
ஓபிஎஸ் தர்மயுத்தமும் கூவத்தூரும்: ஆனால் சசிகலா முதல்வராகவும் விரும்பியதால் ஓ.பன்னீர்செல்வம் பதவியை ராஜினாமா செய்தார். அத்துடன் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி தர்மயுத்தம் நடத்தினார். சசிகலா முதல்வராக பதவியேற்க ஏற்பாடுகள் நடந்த நிலையில்தான் சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு வரப் போவதாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து சசிகலா, அதிமுக எம்.எல்.ஏக்களுடன் கூவத்தூரில் முகாமிட்டார்.

முதல்வராக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி: ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதனால் சசிகலா சிறைக்கு சென்றார். அப்போது எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கி விட்டு சிறைக்குப் போனார் சசிகலா.
சிறைக்கு போன சசிகலா: சசிகலா நீக்கம்: சசிகலா பெங்களூர் சிறையில் தண்டனையை அனுபவித்த போது, அதிமுகவில் கலகக் குரல் எழுப்பிய ஓ.பன்னீர்செல்வம் திடீரென எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்தார். 2017-ம் ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில், அக்கட்சி பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்பட்டார். அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளும் உருவாக்கப்பட்டன.
சசிகலா வழக்கு: சசிகலா தம்மை அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் முதலில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால் சசிகலாவின் இந்த மனு டிஸ்மிஸ் செய்யப்பட்டது. பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்திலும் சசிகலா மேல்முறையீடு செய்தார். உச்சநீதிமன்றம் வரை இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விரைவாக முடிவெடுக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இதனடிப்படையில்தான் வரும் 30-ந் தேதி சென்னை உயர்நீதிமன்றம் சசிகலாவின் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கிறது.












Click it and Unblock the Notifications