ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு இல்லை..உண்மைக்கு புறம்பான தகவல்கள் பரப்புகின்றனர் - அமைச்சர் நாசர்
சென்னை: தமிழகத்தில் சாதாரண மக்கள் பயன்படுத்தும் பால் பாக்கெட்டின் விலை உயர்த்தப்படவில்லை என்று பால் வளத்துறை அமைச்சர் நாசர் கூறியுள்ளார். ஆவின் பால் பச்சை நிற பாக்கெட்டுகளுக்கு தட்டுப்பாடுகள் இல்லை என்று கூறிய அமைச்சர், ஆவின் பால் பற்றி உண்மைக்கு புறம்பான தகவல்களை தருவதாகவும் தெரிவித்தார்.
நவம்பர் 5ஆம் தேதி முதல் பசும் பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 32 லிருந்து ரூபாய் 35 ஆகவும் எருமை பால் லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 41 லிருந்து 44 ஆகவும் உயர்த்தி வழங்கப்பட்டது. இந்த விலை உயர்வின் காரணமாக ஏற்படும் கூடுதல் செலவினத்தை ஈடு செய்ய ஆரஞ்சு நிற பாலின் விற்பனை விலை உயர்த்தப்பட்டது. அதே நேரத்தில் நீல நிறம் பால் பாக்கெட் மற்றும் நிலைப்படுத்தப்பட்ட பால் பச்சை நிறம் பால் பாக்கெட் ஆகியவற்றின் விலையில் மாற்றம் இன்றி தற்போதைய நிலையே தொடரும் என்று தெரிவிக்கப்பட்டது
ஆவின் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், தற்போதுள்ள நிறைகொழுப்பு பால் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு எவ்வித விலை மாற்றமின்றி லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 46க்கு புதுபிக்கப்படும். சில்லறை விற்பனை விலையில் விற்கப்படும் நிறைகொழுப்பு பாலின் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 60ஆக 05.11.2022 முதல் மாற்றி அமைக்கப்படுகிறது. இந்த விலை மாற்றம் உற்ப்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலை உயர்வினை வழங்குவதற்காக ஏற்படும் கூடுதல் செலவினத்தை பகுதியாக ஈடு செய்யும் வகையில் நடைமுறைபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
பால் விலை உயர்வுக்கு அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து பால் விலை உயர்த்தப்பட்டது ஏன் என்று அமைச்சர் நாசர் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், பசும்பால் கொள்முதல் விலையை 3 ரூபாய் உயர்த்தி 35 ரூபாயாகவும், எருமைப்பால் விலையை 3 ரூபாய் உயர்த்தி 41 ரூபாயாகவும் மாற்றி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் நேரடியாக பயன்பெறுவார்கள்.
இந்த விலையேற்றத்தால் விற்பனை விலையில் சாமானிய மக்களை சென்றடையாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆரஞ்சு நிற பால் பாக்கெட் மட்டும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பால் அட்டை வைத்திருப்பவர்களுக்கு அதே 46 ரூபாய்க்கு மட்டுமே விற்கப்படும். வணிக ரீதியாக வாங்கும் நபர்களுக்கு மட்டும் 12 ரூபாய் உயர்த்தி 48க்கு பதிலாக 60 ரூபாயாக விற்பனை செய்யப்படும் என்று கூறினார். இந்த பால் பாக்கெட்களை 11 லட்சம் பேர் வாங்கி வருகின்றனர்.
அதிமுக ஆட்சி காலத்திலும் பால் விலை உயர்த்தப்பட்டது. அதை திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 ரூபாய் வரை குறைத்து நடவடிக்கை எடுத்தார். தற்போது தனியார் பால் விலையை விட ஆவின் பால் விலை குறைவாக தான் இருக்கிறது. குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களுடன் ஒப்பிட்டால் தமிழகத்தில் பால் விலை 10 ரூபாய் வரை குறைவாகவே விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் நாசர் தெரிவித்தார்.
இதனிடையே திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் திமுக சார்பில் உறுப்பினர்கள் கூட்டம் நிகழ்ச்சி தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நாசர், மக்களின் தேவைக்கேற்ப ஆவின் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி செய்யப்படுவதாக கூறினார். சாதாரண மக்கள் பயன்படுத்தும் பால் விலையை உயர்த்தவில்லை என்றும் கூறினார்.
தமிழகம் முழுவதும் முறைகேடாக வைத்திருந்த 40 ஆயிரம் பால் கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆவின் பால் பச்சை நிற பாக்கெட்டுகளுக்கு தட்டுப்பாடுகள் இல்லை என்று கூறிய அமைச்சர், ஆவின் பால் பற்றி உண்மைக்கு புறம்பான தகவல்களை தருகின்றனர். கர்நாடகாவில் நந்தினி பால் தரத்தை உயர்த்தும் வகையில் பேசும் பாஜகவினர் ஆவின் பாலின் தரத்தை குறைத்து கூறுவதாகவும் தெரிவித்தார்.