இல்லாத மதுரை எய்ம்ஸ்.. இன்று முதல் நிர்வாக கூட்டம்! அட ஏபிவிபி சுப்பையா இருக்காரே -யார் தெரியுதா?
சென்னை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்ற கேள்வி மக்கள் மனதில் தொடர்ந்து இருந்து வரும் நிலையில், இன்று மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் முதல் நிர்வாகக்குழு கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்பவர்கள் பட்டியலில் ஏபிவிபி முன்னாள் நிர்வாகி சுப்பையா சண்முகம் பெயர் இடம்பெற்று இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு மக்களின் பல ஆண்டுகாலம் கோரிக்கையாக இருந்து வரும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி மதுரை மாவட்டம் தோப்பூரில் கடந்த 2019 ஆம் ஆண்டு நாட்டினார்.
தோப்பூரில் 224.24 ஏக்கர் பரப்பளவில் உயர் மருத்துவ வசதிகள் கொண்ட மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் எய்ம்ஸ் மருத்துவமனை 750 ஏக்கர் படுக்கைகளுடன் அமைக்கப்படும் என்று கூறப்பட்டது.

நிர்வாக மற்றும் ஆட்சிமன்ற குழு
இந்த எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிர்வாக மற்றும் ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் கடந்த 2020 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டனர். இதில் மருத்துவமனை தலைவராக மருத்துவர் நாகராஜன் வெங்கடராமன் நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு அரசு தலைமை செயலாளர் இறையன்பு, எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக துணை வேந்தர் சுதா சேஷய்யன் உள்ளிட்டோரும் இதில் உறுப்பினர்களாக இடம்பெற்று உள்ளனர்.

ஏபிவிபி சுப்பையா
இதில் வாரிய குழுவில் உறுப்பினராக தேனி தொகுதி அதிமுக எம்பி ஓ.பி.ரவீந்திரநாத், விருதுநகர் காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாக்கூர், மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் இடம்பெற்று உள்ளனர். அதேபோல் ஐஐடி இயக்குநர் காமகோடி, மருத்துவர் சண்முகம் சுப்பையாவும் இதில் உறுப்பினர்களாக உள்ளன. ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பான ஏபிவிபியின் முன்னாள் தலைவரான சுப்பையா, மூதாட்டி வீட்டில் சிறுநீர் கழித்து சர்ச்சையில் சிக்கியவர்.

கட்டுமான பணிகள் நிலை
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் 45 மாதங்களில் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், மூன்று ஆண்டுகள் கழிந்த பிறகும் சுற்றுச்சுவரை தவிர்த்து வேறு பணிகள் எதுவும் நடக்கவில்லை என்பது எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டு. இது ஒருபுறம் இருக்க இந்த ஆண்டிற்கான எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது.

வரைபடம் தயாரிக்கும் பணி
மருத்துவமனைக்கான வரைபடம் தயாரிக்கும் பணி நிறைவடைந்துவிட்டதாக கடந்த சில மாதங்களுக்கு முன் தெரிவித்த மத்திய அரசு, மொத்த நிதியான ரூ.1,977 கோடியில் ஏற்கனவே ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டதாகவும் மீதம் இருக்கும் நிதி விரைவில் ஒதுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கான திட்ட அறிக்கையை கடந்த 2022 கடந்த மே மாதம் சுகாதாரத்துறை வெளியிட்டது.

2028ல் மருத்துவமனை
அந்த அறிக்கையில், "எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடத்திற்கான வரைபடத்திற்கான அனுமதி மற்றும் சுற்றுச்சூழல் ஆணையத்தின் அனுமதி ஆகியவற்றை பெறும் பணிகள் 2023 ஆம் ஆண்டு வரை நடைபெறும். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிட பணிகள் 2026 ஆம் ஆண்டு வரை நடைபெற்று 2028 முதல் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையில் முழுமையாக மக்களின் பயன்பாட்டுக்கு வரும்." என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நிர்வாக, ஆட்சிமன்ற குழு கூட்டம்
இந்த நிலையில் இன்று மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் முதல் நிர்வாக மற்றும் ஆட்சிமன்ற குழுக்களின் கூட்டம் நடைபெற இருக்கிறது. சென்னையில் இன்று மதியம் 12 மணியளவில் தொடங்கும். இந்த கூட்டத்தில் மருத்துவமனை தலைவர் நாகராஜன் வெங்கடராமன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம் தாக்கூர், ஓ.பி.ரவீந்திரநாத், சர்ச்சையில் சிக்கிய ஏபிவிபி சுப்பையா சண்முகம் உள்ளிட்ட உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.












Click it and Unblock the Notifications