மார்ச் முதல் சென்னையில் ஏசி மின்சார ரயில்.. தாம்பரம்-கடற்கரை இடையே கட்டணம் எவ்வளவு தெரியுமா?
சென்னையில் புறநகர் ரயில்களான மின்சார ரயில்களில் பயணிப்பது என்பது கோடைக்காலங்களில் மிகவும் கடினமானது ஆகும். கடும் கூட்ட நெரிசலுக்கு நடுவே இனி மின்சார ரயில்களில் எளிதாக பயணிக்கலாம். ஏனெனில் வரும் மார்ச் முதல் சென்னையில் ஏசி மின்சார ரயில்கள் ஓடப்போகிறது. தாம்பரம் கடற்கரை இடையே ஏசி மின்சார ரயிலில் பயணிக்க 95 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட வாய்ப்பு உள்ளதாம். வரும் பிப்ரவரி இரண்டாம் வாரத்திற்கு பிறகு சோதனை ஓட்டம் ஆரம்பம் ஆக உள்ளது.
மார்ச் மாதம் முதல் சென்னையில் கடற்கரை முதல் தாம்பரம் இடையே ஏசி மின்சார ரயில் ஓடப்போகிறது. பொதுவாக சென்னையில் பிப்ரவரி இறுதியிலேயே கோடை காலம் ஆரம்பம் ஆகிவிடும். எனவே சென்னையில் உள்ள ரயில் பயணிகள் கோடை வெப்பத்தை சமாளிக்க ஏசி மின்சார ரயில்களில் தாராளமாக பயணிக்க முடியும். ஏனெனில் சென்னை பெரம்பூர் ஐசிஎப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வந்த ஏசி மின்சார ரயில் ஒருவழியாக ரெடியாகிவிட்டது. 12 பெட்டிகளை கொண்ட ஏசி மின்சார ரயிலில் ஒரே நேரத்தில் 5,700 பயணிகள் பயணிக்க முடியும். 1,320 பேர் இந்த ஏசி மின்சார ரயிலில் உட்கார்ந்தபடி பயணிக்க முடியும். இந்த ரயில்களை ஐசிஎப் நிறுவனம் இரண்டு வாரங்களில் சென்னை கோட்டத்திடம் ஒப்படைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுபற்றி ரயில்வே அதிகாரிகள் கூறும் போது, சென்னையில் ஏசி மின்சார ரயிலுக்கான சோதனை ஓட்டம் பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் இருந்து திட்டமிட்டிருக்கிறோம். முதற்கட்டமாக சென்னை கடற்கரை மற்றும் தாம்பரத்தில் இருந்து மார்ச் முதல் ஏசி ரயில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஏசி மின்சார ரயில்களில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் ஐசிஎப் பணிமனையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 12 பெட்டிகள் கொண்ட இந்த ரயில் வழக்கமான மின்சார ரயிலை விட அதிக பயணிகளை ஏற்றி செல்லும் திறன் உடையவை ஆகும். விரைவில் தெற்கு ரயில்வேக்கு அனுப்பிவிடுவோம் என்று கூறினார்கள்.
தாம்பரம் கடற்கரை இடையே ஏசி ரயிலில் கட்டணம் எவ்வளவு: சென்னையில் ஓட உள்ள ஏசி மின்சார ரயில்களை கட்டணம் என்பது சாதாரண மின்சார ரயில் கட்டணத்தை விட மிக அதிகமாகவே இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த 2022ம் ஆண்டு மும்பையின் புறநகர் ரயில்களுக்கான கட்டணச் சலுகைகளை ரயில்வே அறிமுகப்படுத்தி இருந்தது. ஏசி மின்சார ரயில் சேவைகள் தினமும் இயங்கி வருகின்றன.
மேற்கு ரயில்வே அங்கு வெளியிடட் திருத்தப்பட்ட கட்டணங்களின்படி, டிக்கெட் விலைகள் 9 கி.மீ.க்கு ரூ.35, 15 கி.மீ. வரை ரூ.50, 24 கி.மீ.க்கு ரூ.70 மற்றும் 34 கி.மீ. வரை ரூ.95 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. தெற்கு ரயில்வே அதே கட்டண மாதிரியைப் பின்பற்றினால், சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் வரை 28.6 கி.மீ. பயணத்திற்கு பயணிகளுக்கு ரூ.95 செலவாகும். ஒப்பிடுகையில், விம்கோ நகரிலிருந்து விமான நிலையத்திற்கு 32 கி.மீ பயணத்திற்கு சென்னை மெட்ரோ ரூ.50 மட்டுமே வசூலிக்கிறது. எனவே மும்பை அளவிற்கு கட்டணம் வசூலிக்கப்படுமா அல்லது குறைக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications