எனக்கு அவரை தெரியும்.. இவரை தெரியும் என தப்ப முடியாது... தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு கடிவாளம்
சென்னை: கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக தனியார் மருத்துவமனைகள் மீது தமிழகம் முழுவதும் எழுந்த புகாரை அடுத்து பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனக்கு அவரை தெரியும், இவரை தெரியும் என சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் அளந்துவிடும் தனியார் மருத்துவமனை நிர்வாகங்களுக்கு கடிவாளம் போட்டுள்ளது தமிழக சுகாதாரத்துறை.
மேலும், தனியார் ஆய்வகங்களிலும் அதிக கட்டணம் வசூல், முன்னுக்கு பின் முரணான முடிவுகள் உள்ளிட்ட புகார்கள் எழுந்துள்ளன.
கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கொரோனா உறுதி.. மருத்துவமனையில் அனுமதி
தனியார் மருத்துவமனைகள்
மக்கள் கொரோனா பீதியில் உள்ள நிலையில் அதனை வாய்ப்பாக பயன்படுத்தி பணம் பார்க்கும் ஒரு சில தனியார் மருத்துவமனைகளால் ஒட்டுமொத்த மருத்துவத்துறையினருக்கும் அவப்பெயர் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. கொரோனா சிகிச்சைக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட பன்மடங்கு கூடுதலாக வசூலிக்கப்பட்டதாக சென்னையில் உள்ள இரண்டு பிரபல மருத்துவமனைகள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளன.
லட்சங்களில்
அண்மையில் சென்னையில் உள்ள பி வெல் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்ற நோயாளி ஒருவருக்கு 12 லட்சம் ரூபாய் கட்டணம் கட்டச் சொல்லியது மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்ததோடு கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. மருந்தே இல்லாத வியாதிக்கு 12 லட்சம் ரூபாய் கட்டணமா என சமூக வலைதளங்களில் பி வெல் மருத்துவமனை நிர்வாகத்தை விளாசி தள்ளினர் வலைதள ஆர்வலர்கள். இதேபோல் நுங்கம்பாக்கத்தில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனை மீது அதிக கட்டண வசூல் புகார் எழுந்துள்ளது.
அதிரடி ஆய்வு
இதனிடையே தமிழகம் முழுவதும் கொரோனா சோதனை நடத்தக்கூடிய தனியார் ரத்த மாதிரி ஆய்வகங்களின் மீது சுகாதாரத்துறை அதிகாரிகள் ஒரு கண் வைத்துள்ளனர். காரணம், பல இடங்களில் கொரோனா முடிவுகளை முன்னுக்கு பின் முரணாக கூறுவதாகவும், வாரக்கணக்கில் முடிவுகளை கொடுக்காமல் இழுத்தடிப்பதாகவும் எழுந்த புகார் தான். இதற்கு உதாரணமாக கூற வேண்டும் என்றால், திருச்சியில் இயங்கி வந்த டாக்டர்ஸ் டைக்னாஸ்டிக் செண்டரை கூறலாம். இந்த ஆய்வகத்தில் கொரோனா இல்லாத நபர்களுக்கும் கொரோனா இருப்பதாக முடிவுகளை வழங்கியதாகவும், முடிவுகளை அளிக்க 20 நாட்கள் வரை எடுத்துக்கொள்வதாகவும் புகார்கள் குவிந்தன. இது தொடர்பாக அதிரடி ஆய்வு நடத்திய திருச்சி மாவட்ட ஆட்சியர் அந்த ஆய்வகத்திற்கு சீல் வைக்க உத்தரவிட்டதுடன் 5 லட்ச ரூபாய் அபராதமும் விதித்துள்ளார்.
தவறு இருந்தால்
இதனிடையே அதிக கட்டணப் புகார் தொடர்பாக சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாதிக்கப்பட்டவர்கள் அளிக்கும் புகார்கள் மீது உண்மைத்தன்மை இருந்தால் உரிய மருத்துவமனை, ஆய்வகம் மீது தாராளமாக நடவடிக்கை பாயட்டும் என கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டார்.