நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் திடீர் அனுமதி.. 'நலமுடன் இருக்கிறார்'.. லதா ரஜினிகாந்த் விளக்கம்!
சென்னை: தமிழ் திரையுலகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் மக்களின் மனங்களில் நீங்கா இடம்பெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சில நாட்களுக்கு முன்பு தலைநகர் டெல்லியில் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை பெற்றுக் கொண்டார்.
இதன்பிறகு அவர் நேற்று சென்னை வந்தார். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் இன்று மாலை அனுமதிக்கப்பட்டார்.
ரஜினிகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து அவரது மனைவி லதா ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக லதா ரஜினிகாந்த் கூறுகையில், 'ரஜினிகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரஜினிகாந்த் நலமுடன் உள்ளார். ரஜினிக்கு ஒவ்வொரு ஆண்டும் உடல் பரிசோதனை செய்து கொள்வது வழக்கம்' என்று கூறினார். ஆனாலும் லேசான காய்ச்சல் ஏற்பட்டதால்தான் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.