கையில் பூங்கொத்துடன் திடீரென தலைமைச் செயலகம் வந்த ரெடின் கிங்ஸ்லி.. அவரே சொன்ன காரணம்!
சென்னை: தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா, டாக்டர், கட்டா குஸ்தி, பீஸ்ட் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் ரெடின் கிங்ஸ்லி. முன்னணி காமெடி நடிகராக மாறி இருக்கும் ரெடின் கிங்ஸ்லி, பல்வேறு தொழில்களையும் செய்து வருகிறார். அண்மையில் சீரியல் நடிகை சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதன்பின் தற்போது இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது.
தமிழ்நாட்டில் நடக்கும் கண்காட்சிகள், கார்ப்பரேட் நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கும் நபர்களில் ரெடின் கிங்ஸ்லி முக்கியமானவர். இதன் மூலமாக கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டி வருகிறார். இவரின் நிறுவனத்தில் சுமார் 300க்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவரின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.50 கோடி அளவிற்கு மதிப்பிடப்படுகிறது.

இவர் இன்று திடீரென தலைமைச் செயலகத்திற்கு பூங்கொத்துடன் வந்தது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. அப்படி தலைமைச் செயலகத்திற்கு யாரை பார்க்க வந்தார் என்று கேட்கப்பட்டது. இன்று திமுக சார்பாக மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக வேட்பாளர்களான வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் கவிஞர் சல்மா ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதேபோல் மநீம சார்பாக கமல்ஹாசன் வேட்புமனு தாக்கல் செய்தார். இதில் கமல்ஹாசனை சந்திக்க ரெடின் கிங்ஸ்லி வந்தாரோ என்ற கேள்வி எழுந்தது.
இதுகுறித்து ரெடின் கிங்ஸ்லி செய்தியாளர்களிடம் சந்தித்து பேசுகையில், திமுக சார்பாக வழக்கறிஞர் பி.வில்சன் இன்று மாநிலங்களவைத் தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்கிறார். அவர் எங்களின் குடும்ப உறுப்பினர் போல். அவர் தான் எனக்கு வழக்கறிஞரும் கூட.. அதனால் வாழ்த்து கூறுவதற்காக பூங்கொத்து கொடுக்க வந்துள்ளேன்.
கமல்ஹாசன் சார் சினிமா துறையில் இருந்து கொண்டு தற்போது மாநிலங்களவை உறுப்பினராக செல்வது மகிழ்ச்சியான விஷயம். அவரின் ரசிகன் என்ற முறையில் கூடுதல் சந்தோஷம் என்று தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் இருந்த பலரும் அவருடன் சேர்ந்து செல்ஃபி எடுத்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications