மசால் வடையை வைத்து கருணாநிதி செய்த கலாட்டா.. ஆன்லைன் கருத்தரங்கில் கலகலத்த சத்யராஜ்!
சென்னை: பெரியார் திரைப்படத்தில் தான் நடிக்கும் முன்பாக, கருணாநிதி பெரியாரைப் போல நடித்துக் காண்பித்தார் என்று, நடிகர் சத்யராஜ் தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த தினத்தையொட்டி, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரவீந்திரன், இன்று, ஏற்பாடு செய்திருந்த "முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர்" என்ற பெயரிலான இணையவழி கருத்தரங்கில், நடிகர் சத்யராஜ் பங்கேற்றார். அப்போது கருணாநிதியுடனான தனது நினைவலைகளை அவர் பகிர்ந்து கொண்டார்.

இதோ சத்யராஜின் வார்த்தைகளில் இருந்து: கருணாநிதி பற்றி பேச பெருமையும் மகிழ்ச்சியுமடைகிறேன். நான் கல்லூரிக்கு சென்ற காலங்களில் இருந்து கருணாநிதி பேச்சை கேட்டு ரசித்துள்ளேன். பிற்காலங்களில் அவருடனே, நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியான விஷயம்.
1978ம் ஆண்டு, சட்டம் என் கையில் என்ற படம் வெளியானது. அது எனது, முதல் படம். படத்தின் 100வது நாள் விழாவில், வில்லனாக சிறப்பாக நடித்ததற்கு கலைஞர் கையால் கேடயம் வாங்கினேன்.
நான் ஹீரோவாக நடித்த கடலோர கவிதைகள் 100 நாள் ஓடியது. ஆனால் ஏனோ வெற்றி விழா நடைபெறவில்லை. ஆனால் பாலைவன ரோஜாக்கள் திரைப்படத்தில் கருணாநிதியின் வசனம் பேசி நடித்தேன். அந்த படத்தின் 100வது நாள் விழாவில் அவர் கையால், கேடயம் வாங்கினேன்.
அவர் வசனத்தை நான் பேசி நடித்தது எவ்வளவு பெரிய விஷயம்.
"பெரியார்" திரைப்படத்தில் நான் நடிக்கும் முன்பாக, அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியை நேரில் சென்று பார்த்தேன். "ஐயா வேடம் உங்களுக்கு பொருந்தி வருமா" என்று சந்தேகமாக கேட்டார். எனக்கு தூக்கிவாரிப் போட்டது. ஆனால், படத்திற்காக நான், எடுத்த புகைப்படங்களின் ஸ்டில்களை அவரிடம் காட்டினேன். அதை பார்த்ததும், நீ அவர் மாதிரியே இருக்க.. ஆனா உயரம்தான் என்று இழுத்தார். பிறகு அவரே, உயரத்தை கேமரா ஆங்கிளில் சரி செய்து விடுவார்கள்.
பெரியாரை மாதிரி நான் நடித்து காட்டுறேன் என்று கூறி என் முன்பாக ஒரு காட்சியை நடித்துக் காட்டினார். 1967ல் முதல் முறையாக, திமுக ஆட்சிக்கு வந்ததும் திருச்சியில் இருந்த பெரியாரை, அறிஞர் அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோர் சென்று சந்தித்தனர். அப்போது அங்கே பெரியார் என்ன சொன்னார் என்பதை கருணாநிதி என் முன்பாக நடித்துக் காட்டினார்.
"சந்தோஷங்க.., ரொம்ப சந்தோஷங்க.., இவ்வளவு தூரம் வந்ததில் சந்தோஷங்க.." என பெரியார் சொன்னதை அப்படியே நடித்துக் காட்டினார். அதே மாதிரிதான் நானும் படத்தில் நடித்தேன். பெரியார் திரைப்படத்திற்கு தமிழக அரசு சார்பில், ரூ.95 லட்சம் மானியம் கொடுத்தார்.
பெரியார் திரைப்பட்ததை, குறைந்தது 6 தடவையாவது, கருணாநிதி பார்த்தார். பலருக்கும் பிரிவியூ ஷோ போட்டுக் காட்டினார் அவர். பெரியார் திரைப்பட வெற்றி விழாவில், பெரியார் போட்டிருந்த மோதிரத்தை, எனக்கு போட்டனர். அதை கருணாநிதி எனக்கு போட்டு விட்டார். அப்போது, "நான் உட்பட பலரும் இந்த மோதிரம் கிடைக்குமா என எதிர்பார்த்திருந்தோம். அது சத்தியராஜுக்கு கிடைத்துள்ளது. அதனால், சற்று பொறாமையோடுதான் மோதிரத்தை போட்டு விடுகிறேன்" என்று கூறி அவையை கலகலக்க வைத்தார்.
ஒருமுறை கருணாநிதி வீட்டுக்குச் சென்றபோது, மசால் வடை கொடுத்தார்கள். மிகவும் சுவையாக இருந்தது. அதை கருணாநிதியிடம் சொன்னேன். பதிலுக்கு அவர், "எனக்கும் பிடிக்கும் சத்தி.. ஆனால், மருத்துவர் எண்ணை பண்டங்களை சாப்பிட கூடாது என்று சொல்லிவிட்டார். அதனால் சத்யராஜுக்கு மசால் வடை பிடிக்கும் என எனது மனைவியிடம் கூறி சமைக்க வைத்தேன். இதை வெளியே சொல்லி மாட்டி விட்டுவிடாதே.." என்று கூறினார். நானும் கருணாநிதி மனைவி மசால் வடை நல்லா இருக்கா என கேட்டபோது, ரொம்ப நல்லா இருக்கும்மா என்று கூறிவிட்டேன். இப்படித்தான், பேசி ஜாலியா இருப்போம். இவ்வாறு சத்யராஜ் பேசினார்.












Click it and Unblock the Notifications