தேவையில்லாமல் சீண்டப்பட்ட விஜய்.. இப்போ பாருங்க.. அத்தனை கட்சியும் ஓடி வந்து சப்போர்ட்.. வேற லெவல்
சென்னை: "நம்ம தளபதி விஜய்க்கு தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் இவ்வளவு ஆதரவா.." என்ற மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போய் இருக்கிறார்கள் ரசிகர்கள்.
Recommended Video
இங்கிலாந்து நாட்டிலிருந்து 2012ம் ஆண்டு இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரிவிலக்கு கேட்டு நீதிமன்றத்தை அணுகிய நிலையில் சமீபத்தில் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. முதல்வரின் நிவாரண நிதிக்கு, விஜய், ஒரு லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று அபராதம் விதித்தார் நீதிபதி.
இதையடுத்து நடிகர் விஜய்க்கு எதிரான மனநிலை கொண்டவர்கள், டுவிட்டர் தளத்தில் "வரி கட்டுங்க விஜய்" என்ற பெயரில் டேக் டிரெண்ட் செய்தனர்.

சட்டப்படி தப்பில்லை
அதேநேரம் சட்ட வல்லுனர்களோ, விஜய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது தவறு கிடையாது. இது வரிஏய்ப்பு கிடையாது என்றும் விளக்கமளித்தனர். யாருக்கும் தெரியாமல் செய்வதுதான் வரி ஏய்ப்பு. ஆனால், சட்டப்படி தனக்கு வழங்கப்பட்டுள்ள உரிமையைப் பயன்படுத்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார் விஜய். இது எப்படி வரி ஏய்ப்பு என்று சொல்ல முடியும் என அவர்கள் கேள்வி எழுப்பினர்.

இறக்குமதி வரி செலுத்தியாச்சு
சம்பாதிக்கும் பணத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் ஆர்வம். அளவுக்கு அதிகமாக வரி இருப்பதால் அதில் விலக்கு தர விஜய் கேட்டுக் கொண்டார். காரை பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்வதற்காக காரின் மொத்த விலையில் 20% செலுத்தப்பட்ட நிலையில் இங்கு நுழைவு வரி என்பது வசூலிக்க தடை வேண்டும் என்பதே இதன் விஜய் தரப்பு மனுவில் விடுத்திருந்த கோரிக்கை. இதற்கு முன்பும் பலருக்கு இது போல வரிச் சலுகைகள் வழங்கப்படும் இருக்கின்றன, நிராகரிக்கப்படும் இருக்கின்றன. எனவே விஜய் முயற்சி செய்து பார்த்ததில் தவறு கிடையாது என்பது அவர்கள் வாதம்.

விஜய் குறி வைக்கப்படுவதாக குற்றச்சாட்டு
சமூக வலைத்தளங்களில் விஜய்யை மோசமாக ஒரு சிலர் விமர்சனம் செய்த நிலையில்தான் அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ஆதரவு கரம் நீட்ட தொடங்கியிருக்கிறார்கள். அந்தக் கட்சி.. இந்த கட்சி என்று கிடையாது, பாஜக தவிர பெரும்பாலும் பெரிய கட்சிகளை சேர்ந்த அனைத்து தலைவர்களும் விஜய் வழக்கு தொடர்ந்ததில் தப்பு இல்லை.. அவர் குறிவைக்கப்படுவது சரியில்லை என்று அழுத்தம் திருத்தமாக ஆணித்தரமாக சொல்லி வருகிறார்கள்.

பாஜக vs விஜய்
மெர்சல் திரைப்படத்தில் கோவில் கட்டுவதற்கு பதிலாக மருத்துவமனை கட்ட வேண்டும் என்ற டயலாக் விஜய் கதாபாத்திரத்தால், பேசப்பட்டு இருக்கும். இதை பாஜக எதிர்த்தது. பாஜக சீனியர் தலைவர் எச்.ராஜா ஒருபடி மேலே போய், நடிகர் விஜய் கிறிஸ்தவர் என்பதால் இந்து மதத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறார் என்றும், அவர் பெயர் ஜோசப் விஜய் என்றும் தெரிவித்தார். இதற்கு பதிலடியாக அடுத்து விஜய் வெளியிட்ட ஒரு அறிக்கையில், தனது பெயரை ஜோசப் விஜய் என்று வெளிப்படையாக எழுதி இருந்தார்.

நெய்வேலியில் விஜய் செல்ஃபி
அவருக்கு தொடர்ந்து அழுத்தங்கள் கொடுக்கப்பட்டபோது, மாஸ்டர் ஷூட்டிங் முடிந்த ஒரு நாள் மாலை வேளையில், நெய்வேலி சுரங்கம் அருகே ஒரு வேன் மீது ஏறி நின்று ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார். அந்த செல்பி புகைப்படம் பல சாதனைகளைப் படைத்தது தனிக்கதை. ஆனால் தனக்கு பின்னால் இத்தனை ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை அந்த ஒற்றை படம் மூலம் உலகுக்கு உணர்த்தி இருந்தார் விஜய்.

அரசியல் தலைவர்கள்
இப்போதும் பாஜக ஆதரவாளர்கள் மட்டும் விஜய் வரி ஏய்ப்பு செய்து விட்டதாக குற்றம் சாட்டி வருகின்றனர். ஒரு சில போட்டி நடிகர்களின் ரசிகர்களும் அவரை கிண்டல் செய்கிறார்கள். ஆனால், இந்த வழக்கின் உண்மை தன்மையை உணர்ந்து கொண்ட அரசியல் தலைவர்கள் அனைவரும் அவருக்கு ஆதரவு கரம் நீட்டி உள்ளனர்.

திமுக, காங்கிரஸ் ஆதரவு
திமுகவின் செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், நடிகர் விஜய் கேட்டது சச்சினைப் போல தனக்கும் வரி விலக்கு தாருங்கள் என்ற கோரிக்கைதானே தவிர வரி ஏய்ப்பு இல்லை என்று கூறினார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கார்த்தி சிதம்பரம் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார். இந்திய மக்கள் யார் வேண்டுமானாலும் வரி குறைப்பு கேட்டு முறையிடுவது அவர்களது உரிமை என்றார் அவர்.

அதிமுக பக்கமும் ஆதரவு
இன்னொரு பக்கம், யாரும் எதிர்பார்க்காத வகையில், அதிமுக பக்கம் இருந்தும் ஆதரவு குரல் வந்துள்ளது. பாஜக கூட்டணியில் அதிமுக இருந்தபோதிலும் அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ஜெயபிரதீப் வெளியிட்ட அறிக்கையில், சச்சின் டெண்டுல்கருக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்ட நிலையில் விஜய்க்கு வரிவிலக்கு மறுக்கப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்ததோடு தனது ஆதரவை பதிவு செய்தார்.

சீமான் ஆதரவு
இந்த நிலையில்தான் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், விஜய்க்கு எதிராக அழுத்தங்கள் கொடுக்கப்படுவதாகவும், அதற்கு அவர் பணிந்து செல்லக்கூடாது என்று தெரிவித்திருக்கிறார். நாம் தமிழர் கட்சியின் ஆதரவை அவர் விஜய்க்கு வழங்கியிருக்கிறார்.

ரசிகர் பலம்
நடிகர் விஜய்க்கு இருக்கக்கூடிய லட்சக்கணக்கான இளம் ரசிகர் கூட்டம் அரசியல் கட்சிகள் அவரை ஆதரிப்பதற்கு ஒரு காரணம் என்கிறார் அரசியல் பார்வையாளர் ஒருவர். இதைத்தாண்டி.. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம், மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தோளோடு தோள் நின்றவர் விஜய். எனவே அவரது அரசியல் கொள்கை, சமூக அக்கறை போன்றவற்றின் காரணமாகவும் அரசியல் கட்சித் தலைவர்கள் அவருக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்ற கருத்தையும் பார்க்க முடிகிறது.

சீண்டினால் வளர்ச்சி
எது எப்படி இருந்தாலும், தேவையில்லாமல் விஜய் பற்றி சமூக தளங்களில் விமர்சனம் செய்து, இப்போது அவருக்கான ஆதரவு வட்டத்தை அதிகரித்து விட்டனர் ஒரு தரப்பினர் என்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு முறை விஜய் குறிவைக்கப்படும் போதும் அவருக்கான ஆதரவு தளம் என்பது அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்பதுதான் கடந்த கால வரலாறு. இதை ஒரு நீதிமன்ற வழக்கு என்பதோடு விட்டு விடாமல் அவரை குற்றவாளி என்பது போல பிம்பம் செய்ய முற்பட்டவர்களுக்கு இப்போது மூக்கறுப்பு நடந்துள்ளது.












Click it and Unblock the Notifications