வராரு வராரு தளபதி வராரு..கொங்கு மண்டலத்தில் கால் வைக்கும் விஜய்! சென்னைக்கு வெளியே முதன்முதலாக..!
சென்னை: தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் முதன் முறையாக சென்னையை தாண்டி வெளி மாவட்டத்தில் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். கோயம்புத்தூரில் வரும் 26, 27 ஆகிய தேதிகளில் வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறும் நிலையில் அதில் கலந்துகொண்டு பேச இருப்பதாக அறிவித்துள்ளார் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த். இதனால் அந்த கட்சி தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
நடிகராக இருந்து தற்போது அரசியல்வாதி அவதாரம் எடுத்திருக்கும் விஜய் 2026 சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு கட்சி பணிகளை தீவிரப் படுத்தி வருகிறார். கட்சியை மொத்தம் 110க்கும் மேற்பட்ட கட்சி மாவட்டங்களாக பிரித்து மாவட்ட செயலாளர் நியமனம் நிறைவடைந்து இருக்கிறது.

தற்போது பூத் கமிட்டி நியமிக்கப்பட்டு வரும் நிலையில் விஜய் மீது எதிர்க்கட்சிகள் முக்கிய குற்றச்சாட்டை வைக்கின்றன. ஒர்க் ப்ரம் ஹோம் அரசியல், பனையூர் பண்ணையார் என திமுக - பாஜகவினர் விஜயை விமர்சித்து வருகின்றனர்.
காரணம் கட்சி மாநாடு தவிர்த்து விஜய் பிற பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை. கடைசியாக பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவினரை சந்தித்தது. அதற்கு பிறகு ராயப்பேட்டையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் மட்டுமே கலந்து கொண்டார். இதனால் விஜய் கடும் விமர்சனங்களை சந்திக்க நேர்ந்தது. இந்த நிலையில் தேர்தல் நெருங்க நெருங்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் செல்ல விஜய் திட்டமிட்டு இருக்கிறார்.
அந்த வகையில் கோயம்புத்தூரில் நடைபெற இருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிகழ்ச்சியில் விஜய் இரண்டு நாள் கலந்து கொண்டு பேச இருப்பதாக அதிரடியாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்தப் பேரன்பையும் பேராதரவையும் பெற்ற நம் வெற்றித் தலைவர் அவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கிய நாள் முதலே நமக்கான வெற்றிப் பாதை விரிவடைந்துகொண்டே வருகிறது. நம் செல்வாக்கு வளர்ந்துகொண்டே வருகிறது. இதை நமது கொடி அறிமுக விழா, வெற்றிக் கொள்கைத் திருவிழா, இரண்டாம் ஆண்டுத் தொடக்க விழா மற்றும் இதர மக்கள் பணிகள் வாயிலாகத் தொடர்ந்து கண்டு வருகின்றோம்.
தமிழக மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் நடவடிக்கையின் அடுத்தக் கட்டமாக, நமது கழகத்தின் வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கம், வரும் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் (26.04.2025 & 27.04.2025) தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோயம்புத்தூரில். குரும்பப்பாளையம் எஸ்.என்.எஸ். கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இதை நம் வெற்றித் தலைவர் அவர்களின் ஒப்புதலின் பேரில் உங்களுடன் பெருமகிழ்ச்சியோடு பகிர்ந்துகொள்கிறேன்.
இந்த இரண்டு நாள் கருத்தரங்கில் முதல் நாளில் 10 கழக மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களும், இரண்டாம் நாளில் 13 கழக மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களும் கீழ்க்கண்ட அட்டவணைப்படி பங்கேற்பார்கள்.
26ஆம் தேதி ஈரோடு கிழக்கு மாவட்டம், ஈரோடு மாநகர் மாவட்டம், ஈரோடு மேற்கு மாவட்டம், சேலம் கிழக்கு மாவட்டம், சேலம் மேற்கு மாவட்டம், சேலம் மத்திய மாவட்டம், சேலம் வட மேற்கு மாவட்டம், சேலம் தெற்கு மாவட்டம், நாமக்கல் கிழக்கு மாவட்டம், நாமக்கல் மேற்கு மாவட்டம்.
27ஆம் தேதி கரூர் மேற்கு மாவட்டம், கரூர் கிழக்கு மாவட்டம், கோவை மாநகர் மாவட்டம், கோவை தெற்கு மாவட்டம், கோவை கிழக்கு மாவட்டம், கோவை புறநகர் கிழக்கு மாவட்டம், கோவை புறநகர் வடக்கு மாவட்டம், திருப்பூர் மேற்கு மாவட்டம், திருப்பூர் தெற்கு மாவட்டம், திருப்பூர் கிழக்கு மாவட்டம், திருப்பூர் மாநகர் மாவட்டம்,நீலகிரி கிழக்கு மாவட்டம், நீலகிரி மேற்கு மாவட்டம் ஆகிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
— TVK Party HQ (@TVKPartyHQ) April 21, 2025
இந்தக் கருத்தரங்கில், நம் வெற்றித் தலைவர் அவர்கள் கலந்துகொண்டு. தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான செயல்பாடுகள் குறித்தும், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களப்பணிகள் குறித்தும், அது தொடர்பாகக் கழகம் சார்ந்து நாம் மேற்கொள்ள வேண்டிய கடமைகள் குறித்தும் விளக்கவுரை ஆற்ற உள்ளார் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமே வாக்காளர்களும், வாக்குச்சாவடி முகவர்களும் தான். எனவே தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச் சாவடி தொடர்பான பணிகளுக்கு முதுகெலும்பாகத் திகழும் வாக்குச்சாவடி முகவர்கள் மட்டும், நம் வெற்றித் தலைவர் அவர்களின் தலைமையில் நடைபெறும் இந்தக் கருத்தரங்கில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுகிறேன். ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற உள்ள நம் வெற்றித் தலைவர் அவர்களின் கரங்களுக்கு வலுச் சேர்ப்போம். வாகை சூடுவோம்!" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications