பசியால் வாடும் தெருநாய்கள் கோபப்பட உரிமை இல்லையா? கொந்தளித்த சீரியல் நடிகை அம்மு!
சென்னை: 6 அறிவு இருக்கும் மனிதர்கள் கோபப்படும் போது, பசியால் வாடும் நாய்கள் கோபப்பட உரிமை இல்லையா என்று சீரியல் நடிகை அம்மு கேள்வி எழுப்பி இருக்கிறார். தெருவில் வாழும் நாய்கள் சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுவதாகக் கூறிய நடிகை அம்மு, எத்தனை குழந்தைகளை நாய்கள் காப்பாற்றி இருக்கிறது தெரியுமா என்றும் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
நாடு முழுவதும் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாலைகளில் செல்லும் முதியோர், குழந்தைகள், இளைஞர்கள் என்று அனைவரையும் கடிக்கும் சம்பவம் தொடர் கதையாகி வருகின்றன. கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே தெரு நாய்களைக் கட்டுப்படுத்த அரசுகள் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்த நிலையில் டெல்லியில் அதிகரித்து வரும் தெரு நாய்கள் தொல்லை தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் போது நீதிபதிகள், டெல்லியில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் பிடித்து காப்பகங்களில் அடைக்க உத்தரவிடப்பட்டது. இதனை எதிர்த்து மேல்முறையீட்டுக்கு சென்ற போதும், அதே உத்தரவு உறுதி செய்யப்பட்டது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து பல்வேறு மாநிலங்களிலும் விலங்குகள் நல வாரிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாகச் சென்னை எழும்பூரில் விலங்குகள் நல வாரிய அமைப்புகள் இன்று அமைதி பேரணியில் ஈடுபட்டன. பிரபல நடிகையான வினோதினி, சீரியல் நடிகை அம்மு உள்ளிட்டோர் பேரணியில் கலந்து கொண்டு ஆவேசமான கருத்துக்களை வெளிப்படுத்தினர்.
அதில் சீரியல் நடிகை அம்மு செய்தியாளர்களிடம் பேசுகையில், வாயில்லா ஜீவன்கள் என்று நாம் சொல்வதற்கு காரணமே, அவைகளால் வாயைத் திறந்து எந்த உணர்வுகளை சொல்ல முடியாது என்பதால் தான். நமக்கு எப்படி மொழி இருக்கிறதோ, அதுபோல் நாய்களுக்குக் கத்துவது, கடிப்பது தான் அவைகளின் மொழி. அதற்காக எல்லோரையும் பார்த்து நாய்கள் கத்துவதோ, கடிப்பதோ அல்ல.
வயிறு பசியோடு இருக்குதுங்க.. சாப்பாடு இல்லாமல் நாய்கள் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறது.. குடிக்கிறதுக்குத் தண்ணீர் இல்லை.. உடம்பில் அவ்வளவு வலி.. உடலில் புண்களோ, பூச்சிகளோ இருந்தால் கூட எடுப்பதற்கு யாருமில்ல.. அப்படி இருக்கையில், பசியோடு இருக்கும் நாம், கோபம் வந்தால் யாரையாவது திட்டுகிறோம்.. நமக்குக் கோபம் வரலாம்.. ஆனால் நாய்களுக்குக் கோபம் வரக்கூடாதா.. 6 அறிவு உள்ள நாமே கோபப்படலாம் என்றால், சாப்பாடு இல்லாமல் கஷ்டப்படும் நாய்கள் ஏதாவது ஒருநாள் குரைத்தால் கூட கத்த தொடங்கிவிடுகிறீர்கள்..
மனித உருவில் உள்ள மிருகங்களுக்கு நாட்டில் வாழ்வதற்கு உரிமை இருக்கு.. ஆனால் மிருகமான இந்த குழந்தைகளுக்கு இல்லையா? இந்த குழந்தைகளுக்கு வாய் கூட இல்லை.. அதனால் நாங்கள் குரல் கொடுக்கிறோம்.. குழந்தைகளைப் பாதுகாப்பதும் இதே நாய் தான்.. குழந்தைகளை அப்படியே நாய் கடித்திருந்தாலும் நாங்கள் வருத்தப்படுகிறோம்.. அதற்குக் காரணம் பசி என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications