அரசியல் அராஜகம் ஒழிக! நீதி வெல்லட்டும்! போலீஸ் வாகனத்தில் ஏறும் முன்பு நடிகை கஸ்தூரி கோஷம்
சென்னை: அரசியல் அராஜகம் ஒழிக நீதி வெல்லட்டும் என நீதிமன்ற வளாகத்தில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் வெளியே வந்த நடிகை கஸ்தூரி போலீஸ் வாகனத்தில் ஏறும் போது கோஷமிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தெலுங்கு பேசும் மக்களை அந்தப்புரத்து சேவகர்கள் என மிகவும் அவதூறாக பேசியதாக கஸ்தூரி மீது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதேவேளையில் கஸ்தூரிக்கு எதிராக பலர் தனிநபர் தாக்குதல்களை வீசியிருந்தனர்.

இந்த நிலையில் கஸ்தூரியை போலீஸார் விசாரிக்கவுள்ளதை அறிந்த அவர் போலீஸார் சம்மன் அளிக்க வருவதற்குள் போயஸ் கார்டன் வீட்டை பூட்டிக் கொண்டு செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்து கொண்டு எங்கோ தலைமறைவாகிவிட்டார்.
இதையடுத்து கஸ்தூரியை பிடிக்க தனிப்படை போலீஸ் அமைக்கப்பட்டது. இதனிடையே மதுரை திருநகர், ஆண்டிப்பட்டி காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என கேட்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கஸ்தூரிக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து அவருடைய ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். இதையடுத்து கஸ்தூரியை கைது செய்ய போலீஸார் தீவிரம் காட்டி வந்தனர். கடந்த ஒரு வாரமாக அவரை தேடி வந்த நிலையில் அவர் ஹைதராபாத்தில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து தனிப்படை போலீஸார் அங்கு சென்று அவரை கைது செய்தனர்.
அவரை சாலை மார்க்கமாக இன்று சென்னை அழைத்து வந்தனர். அவர் சென்னை சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு சென்னை எழும்பூர் 5ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ரகுபதி ராஜா முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது நடிகை கஸ்தூரியை வரும் 29ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அப்போது கஸ்தூரி, நீதிபதியிடம், நான் சிங்கிள் மதர். எனது இரு குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டும். சொந்த ஜாமீனில் என்னை விடுவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். ஆனால் அவருக்கு ஜாமீன் தர நீதிபதி மறுத்துவிட்டார்.
இதையடுத்து புழல் சிறைக்கு அழைத்து செல்வதற்காக போலீஸ் வாகனத்தில் ஏறும் போது அரசியல் அராஜகம் ஒழிக, நீதி வெல்லட்டும் என கோஷமிட்டார்.












Click it and Unblock the Notifications