ஜெயலலிதா இறந்தது எப்போது? “ட்வீட்டுக்கு கிளம்பிய எதிர்ப்பு” 2016 டிசம்பர் 4-ஐ நினைவுகூர்ந்த கஸ்தூரி!
சென்னை : கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதியே ஜெயலலிதா இறந்து விட்டதாக தான் சொன்னதை நினைவு கூர்ந்து இன்று பதிவிட்டுள்ளார் நடிகை கஸ்தூரி.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தங்களது 608 பக்க விசாரணை அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைத்தனர். ஆறுமுகசாமியின் விசாரணை அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
2016 டிசம்பர் 4ஆம் தேதி மதியம் 3.30 -3.50 மணிக்குள் ஜெயலலிதா மரணமடைந்திருக்கலாம் என ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 4ஆம் தேதியே ஜெயலலிதா இறந்ததாக அப்போது நடிகை கஸ்தூரி சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டிருந்ததை சுட்டிக்காட்டி இன்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மூளைச்சாவு அடைந்த ஜெயலலிதா.. இறப்பை மறைத்து அறிவிப்பை தாமதப்படுத்த தந்திர நடவடிக்கை.. பகீர் அறிக்கை
பகீர் கிளப்பிய ஆறுமுகசாமி ரிப்போர்ட்
ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கை சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு சிகிச்சை பற்றி சந்தேகங்களை எழுப்பியுள்ள ஆணையம், ஜெயலலிதாவிற்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை, எய்ம்ஸ் மருத்துவக் குழு 5 முறை அப்பல்லோ வந்தும் ஜெயலலிதாவுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கவில்லை. மருத்துவர்கள் பரிந்துரைப்படி ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை தராதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளது.
ஜெயலலிதா இறந்தது எப்போது?
மேலும், ஜெயலலிதா இறந்த நாள் தொடர்பாகவும், அதிர்ச்சிகரமான தகவலை வெளிப்படுத்தியுள்ளது ஆறுமுகசாமி ஆணையம். ஜெயலலிதா டிசம்பர் 5ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு இறந்ததாக அப்பல்லோ மருத்துவமனை தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்திருந்தது. ஆனால் அதற்கு ஒரு நாள் முன்பாக டிசம்பர் 4 ஆம் தேதி பிற்பகல் 3.30 - 3.50 மணியளவில் ஜெயலலிதா இறந்திருக்கலாம் என சாட்சியங்களின் அடிப்படையில் ஆறுமுகசாமி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு நாள் முன்பே
இதற்கு ஆதாரமாக ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு தினத்திற்கு டிசம்பர் 4ஆம் தேதி 3.50 மணிக்கு அவரது சகோதரர் மகன் தீபக் திதி கொடுத்ததை அறிக்கையில் மேற்கோள் காட்டியுள்ளனர். மேலும், டிசம்பர் 4 ஆம் தேதி பிற்பகல் 3.50 மணிக்கு முன்பே மறைந்த முதலமைச்சருக்கு இதய செயலிழப்பு ஏற்பட்டது என்றும் இதயத்தில் மின்சார செயல்பாடு எதுவும் இல்லை மற்றும் இரத்த ஓட்டம் இல்லை என்பதே அவரின் உடல்நிலையை கண்காணித்து வந்தவர்களின் தெளிவான சாட்சியங்களாக இருக்கிறது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்றே சொன்னேன்
இந்த நிலையில் நடிகை கஸ்தூரி கடந்த 2016ஆம் ஆண்டில் டிசம்பர் 4ஆம் தேதியே ஜெயலலிதா இறந்து விட்டதாக தான் சமூக வலைதளங்களில் பதிவிட்டதை நினைவு கூர்ந்துள்ளார். அப்போது ஃபேஸ்புக்கில் வெளியிட்ட பதிவை தற்போது ஷேர் செய்திருக்கும் கஸ்தூரி, "2016ஆம் ஆண்டில் டிசம்பர் 4ஆம் தேதி எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. எதிர்ப்புகள் வலுத்ததால் அந்த ட்விட்டர் பதிவை நீக்கிவிட்டேன். ஆனால், ஃபேஸ்புக் பதிவு அப்படியே இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
நரி யார்? கரி யார்?
மேலும், "ஆறுமுகசாமி அறிக்கையில் உள்ள குறள்:
காலாழ் களரின் நரியடுங் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு.
பாகனுக்கு அடங்காததும், தன்னை எதிர்த்துப் பிடித்த வீரனைத் தன் தந்தத்தால் தாக்கித் தூக்கியதுமான ஆண்யானை, கால் புதையும் சேற்றில் சிக்கிக் கொண்டால், நரிகூட அதைக் கொன்றுவிடும். இங்கு கரி யார்? நரி யார்? இறக்கும் வரை அருகில் இருந்தவர் நரிகள் என கருதுபவர்கள் இறந்த பிறகு இன்னும் கொத்தும் பிணம்தின்னி கழுகுகளை அடையாளம் காண்பது முக்கியம்." என்றும் குறிப்பிட்டுள்ளார் நடிகை கஸ்தூரி.