சினிமா தயாரிப்பாளர் வீட்டில் தஞ்சம்! கதவை திறக்க மறுத்த கஸ்தூரி! எச்சரித்த போலீஸ்! கைதானது எப்படி?
சென்னை: தெலுங்கு பேசும் மக்களை அவதூறாக பேசிய புகாரில் நடிகை கஸ்தூரி தனது வீட்டை பூட்டிக் கொண்டு செல்போனையும் ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாக இருந்த நிலையில் அவர் நேற்று போலீஸாரிடம் சிக்கியது எப்படி என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக அவர் டெல்லியில் இருக்கிறார் என்றும் ஹைதராபாத்தில் இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தன. மேலும் கஸ்தூரி இருக்கும் இடத்தை தனிப்படை போலீஸார் நெருங்கிவிட்டதாக சொல்லப்பட்ட நிலையில் நேற்று இரவு ஹைதராபாத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.

அவர் காவல் துறையிடம் எப்படி சிக்கினார் என்பதை பார்ப்போம். தெலுங்கு பேசும் மக்களை அந்தப்புரத்து சேவகர்கள் என மிகவும் அவதூறாக பேசியதாக கஸ்தூரி மீது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதேவேளையில் கஸ்தூரிக்கு எதிராக பலர் தனிநபர் தாக்குதல்களை வீசியிருந்தனர்.
இந்த நிலையில் கஸ்தூரியை போலீஸார் விசாரிக்கவுள்ளதை அறிந்த அவர் போலீஸார் சம்மன் அளிக்க வருவதற்குள் போயஸ் கார்டன் வீட்டை பூட்டிக் கொண்டு செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்து கொண்டு எங்கோ தலைமறைவாகிவிட்டார்.
இதையடுத்து கஸ்தூரியை பிடிக்க தனிப்படை போலீஸ் அமைக்கப்பட்டது. இதனிடையே மதுரை திருநகர், ஆண்டிப்பட்டி காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என கேட்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கஸ்தூரிக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து அவருடைய ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். இதையடுத்து கஸ்தூரியை கைது செய்ய போலீஸார் தீவிரம் காட்டி வந்தனர். கடந்த ஒரு வாரமாக அவரை தேடி வந்த நிலையில் அவர் டெல்லியில் ஒரு அரசியல்வாதி வீட்டில் தஞ்சமடைந்திருப்பதாக சொல்லப்பட்டது.
இந்த நிலையில் அவர் ஹைதராபாத்தில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து தனிப்படை போலீஸார் அங்கு சென்று அவரை கைது செய்தனர். தற்போது அவரை சாலை மார்க்கமாக சென்னை அழைத்து வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் கஸ்தூரியை போலீஸார் கைது செய்தது எப்படி என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
கஸ்தூரி ஹைதராபாத்தில் சினிமா தயாரிப்பாளர் ஹரியின் வீட்டில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. அவருடைய போனை ஸ்விட்ச் ஆப் செய்திருந்தாலும் தயாரிப்பாளர் ஹரியின் செல்போனில் இருந்து அவர் மற்றவர்களுடன் பேசி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் தயாரிப்பாளர் ஹரியின் வீட்டை சுற்றி வளைத்தனர்.
அப்போது வீட்டை பூட்டிக் கொண்டு உள்ளே இருந்த கஸ்தூரி, கதவை திறக்க மறுத்தார். ஹைதராபாத் போலீஸாரை வரவழைத்த தனிப்படை போலீஸார், "நீங்கள் கதவை திறக்காவிட்டால் நாங்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வருவோம்" என எச்சரித்தனர். எனினும் நீண்ட போராட்டத்திற்கு பிறகே அவர் கதவை திறந்தார். இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்தனர். அந்த தயாரிப்பாளர் வீட்டில் கதவை பூட்டிக் கொண்டு உள்ளேயே இருந்திருக்கிறார். அவர் வெளியே எங்கும் செல்லாமல் இருந்தாராம்.












Click it and Unblock the Notifications